Published : 01 Nov 2023 03:57 PM
Last Updated : 01 Nov 2023 03:57 PM

“சார்பட்டாவை விட 100 மடங்கு சிறப்பான மேக்கிங்” - பா.ரஞ்சித்தை பாராட்டிய விக்ரம்

சென்னை: “இந்தப் படம் மேக்கிங் அளவில் ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும். மேக்கப்புக்கு மட்டும் 4-5 மணி நேரம் செலவு செய்தோம். உங்கள் கணிப்பைத் தாண்டிய படமாக இது இருக்கும்” என நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ படம் குறித்து பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விக்ரம், “வரலாற்றில் இருக்கும் நல்ல விஷயங்களை கொண்டாடவேண்டும். கெட்ட விஷயங்களை மறக்க கூடாது. அது இனியும் நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். ரஞ்சித் மிக அழகாக கதைக்களத்தை விவரித்தார். சில விஷயங்களை நாம் மறந்துவிடுகிறோம். அப்படி நாம் மறந்ததை சித்தரித்திருக்கிறோம். அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சமூகத்தினரின் வாழ்வியலைப் பேசும் இப்படம் நம்மை அழவைத்து சோகத்தை பிழியாமல் நிகழ்வுகளை யதார்த்தமாக பேசும் படைப்பாக இருக்கும்.

கேஜிஎஃப்பில் தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தினோம். காலையில் அவ்வளவு வெப்பமாகவும், இரவில் அப்படியொரு குளிரும் இருக்கும். வெறும் கோவணத்தை கட்டிக்கொண்டு நடிக்க வேண்டியிருந்தது. ‘ஒரு தேள் கொண்டுவாடா’ என ரஞ்சித் சொன்ன 10 நிமிடத்தில் தேள் இருக்கும். பாம்பு கொண்டுவா என்றால் 5 நிமிடத்தில் இருக்கும். எங்கு பார்த்தாலும், பாம்பு, தேள்கள் உலாவும் இடம் அது. அப்படியான இடத்தில் செருப்பு இல்லாமல், பார்த்து பார்த்து நடந்தோம். அப்போதுதான் அந்த இடத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை உணர்ந்தோம். என்னுடைய உடை தொடங்கி தோற்றம் எல்லாமே அவர்களின் வாழ்வியல் தான். மேக்கப்புக்கு மட்டும் 4-5 மணி நேரம் ஆகும். படப்பிடிப்பு தளத்துக்கு சென்றபிறகு கோவணத்தை கட்டிக்கொண்டு கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம்.

முதன்முறையாக நான் லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன். இதனால் உச்சரிப்பு, அதற்கான டோன், அந்த காலத்தின் பேச்சுவழக்கு தொடங்கி எல்லாத்தையும் கவனித்து நடிக்க வேண்டும். சிலசமயம் நடிக்கும்போது குரலில் மாற்றத்தை கொண்டுவரும்போது, அதற்கேற்ப முகபாவனை ஒத்துப்போகாது. இரண்டையும் சரிவர கவனிக்க வேண்டும். பெரும்பாலான ஷாட்கள் சிங்கிள் ஷாட்கள் தான். ஒரு சீன் 2 ஷாட்களில் முடியும். கேமரா சுற்றிக்கொண்டேயிருக்கும். ஒரு தடவை மிஸ்ஸானால் மீண்டும் தொடக்கத்திலிருந்து நடிக்க வேண்டும். ரஞ்சித்தும் எங்களுக்காக படப்பிடிப்பில் கோவணத்துடன் தான் இருந்தார்.

முந்தைய நாள் எப்போடா முடியும் என இருக்கும். அடுத்த நாள் ‘வாங்க ஷூட்டுக்கு போவோம்’ என ஆர்வத்துடன் இருப்பேன். இப்படியான உணர்வை நான் எந்தப் படத்திலும் சந்தித்தது இல்லை. நன்றி ரஞ்சித். அந்தக் கதாபாத்திரத்துடன் வாழ்ந்துவிட்டு, . அந்த வாழ்வியலுடன் கார், விமானத்தில் செல்லும்போது ஏதோ வித்தியாசமான உணர்வாக இருக்கும். இந்தப் படம் மேக்கிங் அளவில் ரஞ்சித்தின் ‘சார்பட்டா’வை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும்.

ரஞ்சித்துடன் பணியாற்றியது மிக்கச்சிறந்த அனுபவம். தொடக்கத்தில் 2,3 நாட்கள் ஒருமாதிரி இருந்தது. பிறகு சிங்க் ஆகிவிட்டேன். அவரின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக இருக்கும். சிறப்பான இயக்குநர் ரஞ்சித். நீங்கள் கணிப்பதை தாண்டி இந்தப் படம் வேற மாதிரியான படமாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x