Published : 24 Oct 2023 09:41 AM
Last Updated : 24 Oct 2023 09:41 AM

“அபார ஞானமும் அயராத உழைப்பும்” - டி.இமானுடன் கைகோத்த பார்த்திபன்

சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்துக்கும் டி.இமான் இசையமைக்க உள்ளார்.

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் ப்ரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதனையடுத்து பார்த்திபன் தனது புதிய படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை அணுகினார். ஆனால் அதீத வேலைப்பளு காரணமாக அப்படத்துக்கு தன்னால் இசையமைக்க இயலாது என்று ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துவிட்டதாக பார்த்திபன் கூறியிருந்தார்.

இந்த சூழலில், பார்த்திபனின் புதிய படத்துக்கு டி.இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பார்த்திபன் கூறியுள்ளதாவது: “வாவென வாய்பிளந்து வரவேற்று வாய் நனைய முத்தமிட்டு இறுதிவரை இருக்க விரும்பி இறுக அணைத்தாலும், திட்டமிட்டபடி சட்டென விட்டு விலகி சென்றுவிடும் சென்ற வினாடிகள்! தும்பைப் பூவின் மீது தூய்மையான பனித்துளி படர்ந்து தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும் பூப்பதுமுண்டு!

இசையை விட தூய்மையானது எது? சென்ற படத்தில் ரகுமானுடன் இணைந்த நான் வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன். இம்மான்.. இமான்! அபார ஞானமும் அயராத உழைப்புமாய் அடுத்தடுத்த மணிகளில் மனிதர் 5 பாடல்களை பிரசவித்தார். இன்னும் இரண்டு கர்ப்பத்தில் ‘மைனா’வின் குரல் போல் இவரின் இசையும் இனிமை. அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்துக் கொண்டிருந்தது. இனி… இனிமை இசையாய்… ஓகே டைட்டில்? அறிவிப்போம் விரைவில்!” இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x