Published : 03 Oct 2023 05:08 PM
Last Updated : 03 Oct 2023 05:08 PM

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானதா? - 5 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த போனி கபூர்

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ஐந்து ஆண்டுகள் கழித்து மனம் திறந்துள்ளார் அவரின் கணவர் போனி கபூர். ‘கந்தன் கருணை’, ’துணைவன்’ ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ’மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் நாயகியாக உருவெடுத்து, 3 தலைமுறை நடிகர்களுடன் ஜோடியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தொடர்ந்து தென்னக மொழிகளிலும் பின்னர் பாலிவுட்டிலும் தடம் பதித்த ஸ்ரீதேவி, அங்கே வெற்றிக்கொடியும் பறக்க விட்டார். கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை இவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடைபெற்ற தனது உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றபோது, ஓட்டலில் தான் தங்கியிருந்த ரூமின் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். இவரது மரணம் குறித்து பல்வேறு பேச்சுக்கள் எழுந்த நிலையில், `எதிர்பாராதவிதமாகக் குளியலறை தொட்டியில் விழுந்து இறந்தார்' என பிரேத பரிசோதனை அறிக்கை வெளிப்படுத்தியது. இதனால் சர்ச்சைகள் ஓய்ந்தன.

இதனிடையே, ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அவரது கணவர் போனி கபூர் பேசியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் இதுதொடர்பாக பேசியுள்ளார். அதில், "ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. திடீர் விபத்தால் நிகழ்ந்த மரணம். இறப்பு குறித்த விசாரணையின்போது கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அதுகுறித்தே பேசியதால், மேலும் இதைப் பற்றி பேச வேண்டாம் என முடிவெடுத்தேன். இதனால் இதுநாள் வரை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து எதுவும் பேசவில்லை.

துபாயில் வைத்து உண்மை கண்டறியும் சோதனை உட்பட அனைத்து விசாரணைகளும் நடந்தன. இந்திய ஊடகங்களின் அழுத்தம் காரணமாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக துபாய் போலீஸார் தெரிவித்தனர். அனைத்தையும் கடந்து வந்தேன். இறப்பில் எந்தக் குற்றமும் இல்லை என போலீஸார் கண்டறிந்தனர். அது தற்செயலாக நடந்த விபத்து என்பது அவர்கள் உறுதிப்படுத்தினர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் அதை குறிப்பிட்டனர்.

ஸ்ரீதேவிக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்தது. இதனால் உப்புள்ள உணவைத் தவிர்க்குமாறு டாக்டர் ஸ்ரீதேவிக்கு அறிவுறுத்தியிருந்தார். மேலும் அந்தச் சமயத்தில் ஸ்ரீதேவி டயட்டில் இருந்தார். பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பிய அவர், திரையில் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக அடிக்கடி பட்டினி இருப்பார்.

எங்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து ஸ்ரீ blackouts எனப்படும் சட்டென மயக்கமாகும் நிலைக்கு இரண்டு முறை சென்றிருக்கிறார். திருமணத்துக்கு முன்னதாக, இதேபோல் கடுமையான டயட்டில் இருந்ததும், அப்போதும் குளியலறையில் ஒருமுறை விழுந்ததில் பல் உடைந்து போனதையும் ஸ்ரீதேவி இறந்தபின் நடிகர் நாகார்ஜுனா என்னிடம் தெரிவித்தார்’’ என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x