Last Updated : 20 Sep, 2023 05:26 PM

 

Published : 20 Sep 2023 05:26 PM
Last Updated : 20 Sep 2023 05:26 PM

சந்தானம் முதல் நெல்சன் வரை - இது ‘கம்பேக்’ காலம்!

‘படம் தோற்றுப்போகலாம். ஆனால், கலைஞன் ஒருபோதும் தோற்பதில்லை’ என அண்மையில் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதைப் போல தோல்விகளுக்குப் பின் தற்போது மீண்டு வரும் தமிழ்த் திரைக் கலைஞர்கள் குறித்து பார்ப்போம்.

சந்தானம்: காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்த பிறகு அவருக்கான ஹிட் படங்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்குதான் இருந்தன. குறிப்பாக 2020-ம் ஆண்டிலிருந்து சந்தானத்தின் கிராஃப்-ஐ எடுத்துக் கொள்வோம். ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘குளு குளு’ படங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், ‘டகால்டி’, ‘பிஸ்கோத்’, ‘டிக்கிலோனா’, ‘சபாபதி’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என தோல்விப் படங்கள் வரிசைக்கட்டின.

இப்படியான சூழலில்தான் சந்தானத்துக்கு ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ கைகொடுத்தது. கடந்த ஜூலை 28-ம் தேதி வெளியான இப்படத்தில் நடிகர் சந்தானம் ‘அன்டர்ப்ளே’ செய்திருந்தார். அதாவது, தனது சக நடிகர்களுக்கான திரை நேரத்தை பகிர்ந்தளித்து ‘உருவகேலி’யை முடிந்த அளவுக்கு தவிர்த்து ‘கிறிஞ்ச்’ இல்லாத திரைக்கதையை கொடுத்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது.

இதனால் சுமார் ரூ.22 கோடியில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.40 கோடிக்கும் மேல் லாபத்தை ஈட்டிகொடுத்து சந்தானத்துக்கு ‘கம்பேக்’ஆக அமைந்தது. அதன் பின் வெளியான ‘கிக்’ சந்தானம் மறக்கவேண்டிய படம் என்றாலும் அவரே பேட்டியில், ‘இன்னும் 2 படம் இருக்கு அதை ரொம்ப முன்னாடி எடுத்தது’ என மறைமுகமாக சொல்லியிருந்தார். எப்படிப் பார்த்தாலும் சந்தானத்துக்கு ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ சமீபகாலத்தில் கம்பேக் தான்.

சிவகார்த்திகேயன்: ‘டாக்டர்’, ‘டான்’ இரண்டு படங்களுமே ரூ.100 கோடி. தொடர் தோல்வியெல்லாம் இல்லை. ‘பிரின்ஸ்’ மட்டும் சறுக்கிவிட்டது. தொடர் வெற்றிப் படங்கள் வரிசையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘பிரின்ஸ்’ ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்ததால் வசூலிலும் படம் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் சிவகார்த்திகேயனுக்கு அடுத்து வெற்றி தேவையாக இருந்தது. அதனை ‘மாவீரன்’ திரைப்படம் ஏமாற்றாமல் கொடுத்தது. ரூ.30 கோடி பட்ஜெட் கொண்ட படம் ரூ.90 கோடி வரை வசூலித்தது என்பது நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கான ‘கம்பேக்’. இதனை அடுத்து வரும் ‘அயலான்’ படத்திலும் அவர் தக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நெல்சன்: ‘டாக்டர்’ வெற்றிக்குப் பிறகு ‘பீஸ்ட்’. சமகாலத்தில் நெல்சனைப் போல ட்ரால் செய்யப்பட்ட இயக்குநர்கள் குறைவு என்று சொல்லும் அளவுக்கு பெரும் விமர்சனத்தை எதிர்கொண்டார். இந்த விமர்சனங்களின் எதிரொலி, ‘ஜெயிலர்’ படத்தை பறிக்கும் அளவுக்குச் சென்றது. நெல்சன் தனக்கு மட்டுமல்ல ரஜினிக்கும் சேர்த்தே ஒரு வெற்றியை தந்தாக வேண்டும். அப்படியான சூழலில் எதிர்பார்ப்புகள் அதிகமிருந்த போதிலும், அதனை ‘ஜெயிலர்’ நிறைவேற்றியிருக்கிறது. கலவையான விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், படம் ரூ.600 கோடியை வசூலித்து வெற்றி பெற்றிருக்கிறது. நிச்சயம் நெல்சனுக்கான ‘கம்பேக்’ஆக ‘ஜெயிலர்’ அமைந்துள்ளது.

ரஜினி: 2019-ல் வெளியான ‘பேட்ட’ படத்துக்குப் பிறகு ரஜினிக்கு வெற்றி என்பது எட்டாக்கனி. ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார்’, ‘சிறுத்தை’ சிவாவின் ‘அண்ணாத்த’ இரண்டு படங்களும் ரசிகர்களை சோதித்தது. ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படும் ‘அண்ணாத்த’ ரூ.100 கோடியை வசூலித்து நஷ்டமடைந்தது. தனது இரண்டு தோல்விகளுக்கு நிகரான ஒரு மாபெரும் வெற்றியை ‘ஜெயிலர்’ படத்தில் எதிர்பார்த்திருந்தார் ரஜினி.

தற்போது அந்த வெற்றி சாத்தியமானதன் மூலம் ‘கம்பேக்’ கொடுத்திருக்கிறார். இந்தப் பட்டியலிலேயே ‘சிறுத்தை’ சிவாவும் அடுத்து ஒரு பெரிய வெற்றிக்காக ‘கங்குவா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அது அவருக்கான கம்பேக்காக அமைய வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சிவகார்த்திகேயனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த இருவரின் வெற்றிகள் சாத்தியமானால் மொத்த டீமே கம்பேக் கொடுத்தது போல் தான்.

விஷால், ஆதிக் ரவிச்சந்திரன், எஸ்.ஜே.சூர்யா: கிட்டத்தட்ட இந்த மூவரும் ‘கம்பேக்’ கொடுத்தாக வேண்டிய கட்டாயம். காரணம் விஷாலுக்கு கடைசியாக ஹிட்டடித்த படத்தின் பெயர் கூட நினைவில் இல்லாத வகையில் வருடங்கள் கடந்துவிட்டன. ‘சண்டகோழி 2’, ‘அயோக்யா’, ‘ஆக்‌ஷன்’, ‘சக்ரா’, ‘எனிமி’, ‘வீரமே வாகை சூடும்’, ‘லத்தி’ இந்த வரிசையில் ‘ஹிட்’டான படத்தை கண்டுபிடிப்பது சிரமம். அதேபோல ஆதிக் ரவிச்சந்திரன் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் கவனம் பெற்றார்.

மற்றபடி ‘அன்பானவன், அசராதவன்,அடங்காதவன்’ படத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். கடந்த ஆண்டு வெளியான ‘பகீரா’ ரசிகர்களுக்கு ‘பகீர்’ அனுபவத்தை கொடுத்தது. விஷால்+ ஆதிக் இருவருக்கும் ஒரு கம்பேக்காக அமைந்தது ‘மார்க் ஆண்டனி’. எஸ்.ஜே.சூர்யா ‘மாநாடு’, ‘டான்’, ‘வதந்தி’ என பேக் டூபேக் ஹிட் கொடுத்த லைம்லைட்டிலேயே இருந்த நிலையில் கடைசியாக வெளியான ‘பொம்மை’ கைநழுவியதால் ‘மார்க் ஆண்டனி’யில் ஸ்கோர் செய்துவிட்டார். ஆக, இந்த ஆண்டு தோல்விகளிலிருந்து மீண்டு கலைஞர்கள் ‘கம்பேக்’ கொடுக்கும் ஆண்டாக மாறியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x