Published : 28 Aug 2023 05:47 AM
Last Updated : 28 Aug 2023 05:47 AM

கலங்கரை விளக்கம்: காற்று வாங்க போனேன்...

சென்னை: ஆங்கிலப் படங்களின் பாதிப்பில் 1960 மற்றும் 70-களில் அதிகமானத் திரைப்படங்கள் தமிழில் உருவாகியுள்ளன. அதில் ஒன்று, எம்.ஜி.ஆர் நடித்த ‘கலங்கரை விளக்கம்’. ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான ‘வெர்டிகோ’ (Vertigo)வின் பாதிப்பில் உருவான படம் இது. ஆனால், அதை அழகாகத் தமிழ்ப்படுத்தி இருப்பார்கள்.

கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன்சரோஜாதேவி, எம்.என்.நம்பியார், நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன், மனோரமா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

வழக்கறிஞர் ரவி (எம்.ஜி.ஆர்), தனது நண்பர் டாக்டர்கோபாலை (கோபாலகிருஷ்ணன்) சந்திக்க மாமல்லபுரம்வருகிறார். சாலையில் நடனமாடும் ஒரு பெண் (சரோஜாதேவி), கலங்கரை விளக்கம் நோக்கி ஓடி, ‘நான் நரசிம்ம பல்லவனிடம் செல்கிறேன்’ என்று தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரை ரவி காப்பாற்றுகிறார். அவள்,தன்னை சிவகாமியாகவும் ரவியை நரசிம்ம பல்லவனாகவும் நினைக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட அவள் பெயர்நீலா என்று தெரியவருகிறது. அவளைக் குணப்படுத்துவதற்காக, நண்பர் கோபால் ஆலோசனைப்படி அவர்கள் வீட்டிலேயே தங்குகிறார் ரவி. இதற்கிடையில் நீலாவின் சித்தப்பா நாகராஜன் (நம்பியார்), அவளையும் தனது அண்ணனையும் கொன்றுவிட்டு சொத்தை அபகரிக்கத் திட்டமிடுகிறார். குணமாகிவரும் நீலா ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள, அவள் தந்தையும் தூக்கமாத்திரை சாப்பிட்டு இறந்துவிடுகிறார். நீலா இறந்த சோகத்தில் இருக்கும் ரவி, ஒரு விழாவில் நீலா போன்ற தோற்றம்கொண்ட மல்லிகாவைச் சந்திக்கிறார். ரவிக்கு சந்தேகம்அதிகரிக்கிறது. அவளைக் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் ரவி, நீலா கொல்லப்பட்டதையும் அதற்குப் பின் இருந்த நாகராஜனின் சதியையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படம்.

இது வழக்கமான எம்.ஜி.ஆர் படம் இல்லை.நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப்படத்தில், எம்.ஜி.ஆர் ஆக்‌ஷன் காட்சிகளிலும் காதல் காட்சியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். ஜி.என்.வேலுமணி தயாரித்த இந்தப் படத்துக்கு தம்பு ஒளிப்பதிவு. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. இதன் பாடல்கள் அனைத்தும் ஹிட்.

பஞ்சு அருணாச்சலம் எழுதி, பி.சுசீலா பாடிய, ‘என்னைமறந்ததேன்’, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா குரலில் ‘பொன்னெழில் பூத்தது’, வாலி வரிகளில், ‘காற்று வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்’, ‘என்ன உறவோ’,‘பல்லவன் பல்லவி பாடட்டுமே’, பாரதிதாசனின் ‘சங்கே முழங்கு’ என அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. 1965-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படம், இப்போது 58 வருடத்தைக் கடந்திருக்கிறது.

இதன் திரைக்கதையில் பணிபுரிந்திருக்கும் இயக்குநர் வி.சி.குகநாதனிடம் இந்தப் படம் பற்றி கேட்டோம். “அப்போது எனக்கு 18, 19 வயது இருக்கும். என் குரு ஜி.பாலசுப்பிரமணியனிடம் பணியாற்றியபோது, அவரிடம் இந்தக் கதை வந்தது. நானும் அதில் பங்குகொண்டேன். இந்தப் படம் வெளியான நேரத்தில்தான் ‘இதயக் கமலம்’, ‘நீ’ படங்களும் வெளியாயின. இந்த 3 படங்களுக்கும் உள்ள ஒற்றுமை, மூன்றிலும் கதாநாயகிகள் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்கள். இதில் சரோஜாதேவி, இதயக் கமலத்தில் கே.ஆர்.விஜயா, நீ படத்தில் ஜெயலலிதா இரட்டை வேடங்களில் நடித்தனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x