Published : 27 Aug 2023 05:59 AM
Last Updated : 27 Aug 2023 05:59 AM

திரை விமர்சனம்: பாட்னர்

ரூ.25 லட்சம் கடன் வாங்கி தொழில் தொடங்கும் ஸ்ரீதர் (ஆதி), நஷ்டமடைகிறார். கடன் கொடுத்தவர், ‘பணத்தைக் கொடு, இல்லை என்றால் தங்கை யை திருமணம் செய்து கொடு’ என்று கேட்கிறார். இதனால் பணம் சம்பாதிக்க, நண்பன் கல்யாணை (யோகிபாபு) தேடி, சென்னை வருகிறார் ஸ்ரீதர். கல்யாண், ஹைடெக் திருட்டு வேலை பார்ப்பது தெரியவருகிறது. வேறு வழியில்லாமல் அவருடன் சேர்கிறார். இவர்கள் ஒரு மெகா திருட்டை செய்தால், ரூ.50 லட்சம் கிடைக்கும் என்ற ஆஃபர் வருகிறது. சரி என்கிறார்கள். அவர்கள் திருடப்போகும் இடம் விஞ்ஞானியின் (பாண்டியராஜன்) லேப். அங்கு நடக்கும் குளறுபடியால், கல்யாணுக்கு ஊசி ஒன்று குத்திவிடுகிறது. விளைவு, ஆணாக இருந்த கல்யாண், மறுநாள் கல்யாணி (ஹன்சிகா) ஆகிவிடுகிறார். இதனால் ஏற்படும் களேபரங்களும் அவர் மீண்டும் கல்யாணாக மாறினாரா இல்லையா என்பதும்தான் படம்.

சுவாரஸ்யமான இந்த ஒன் லைனை வைத்துக்கொண்டு காமெடி படம் தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் மனோஜ் தாமோதரன். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருந்தாலும், அதில் பாதிதான் வெற்றி பெற்றிருக்கிறார். ஆண், பெண்ணாக மாறுவதுதான் கதையின் மையம். ஆனால், இந்த விஷயமே இடைவேளைக்கு முன் தான் நடக்கிறது. அதுவரை நடக்கும் கதைகளில், எண்ணி சில இடங்களில் மட்டும் சிரித்துவிட்டு, அப்புறம்? என்று உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. பின் பகுதி கதையில் கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகளில் மட்டும், காமெடி நன்றாகக் கைகொடுத்திருக்கிறது.

ஆதி, வழக்கம்போல சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார், காதலி பாலக் லால்வாணி மற்றும் ஹன்சிகாவிடம் மாட்டிக்கொண்டு படுகிற தவிப்பு ரசிக்க வைக்கிறது. அவர் கதாபாத்திரம் வலுவானதாக இல்லாததால், அதற்கு மேல் அவராலும் என்ன செய்ய முடியும்? யோகிபாபுவின் காமெடி சில இடங்களில் மட்டுமே சிரிக்க முடிகிறது.

ஹன்சிகாதான் மொத்தப் படத்துக்கும் ஆறுதல். பெண் தோற்றத்தில் ஆணாக அவர் படும் ரகளையை ரசிக்கலாம். அவர் உடல் மொழியும் நடிப்பும் ரசனை. நாயகி பாலக் லால்வாணிக்கு அதிக வாய்ப்பில்லை.

ரோபோ சங்கர், தங்கதுரை, அகஸ்டின் ஆகியோரின் உருவக் கேலி மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் சிரிப்புக்குப் பதில் எரிச்சலையே தருகின்றன. அமைச்சர் ரவிமரியா, விஞ்ஞானி பாண்டியராஜன், யோகி பாபுவின் காதலி 'மைனா' நந்தினி,திருட்டு கம்பெனி ஹெச்.ஆர். முனிஷ்காந்த், ஜான்விஜய் என அனைவரையும் காமெடிக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.

சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசையும் ஷபீர் அகமதுவின் ஒளிப்பதிவும் படத்துக்கு ஓரளவு உதவி இருக்கின்றன. காமெடிக்கு லாஜிக் எதற்கு என்று நினைத்தவர்கள், திரைக்கதையை இன்னும் நகைச்சுவையாக எழுதியிருந்தால், நாமும் இந்தப் படத்தின் ‘பாட்னர்’ ஆகியிருக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x