Published : 22 Aug 2023 12:03 PM
Last Updated : 22 Aug 2023 12:03 PM

“சந்திரயான் வெற்றியுறின் அது மானுட வெற்றி” - வைரமுத்து கருத்து

கோப்புப்படம்

சென்னை: சந்திரயான்-3 மிஷன் குறித்து கவிஞர் வைரமுத்து, எக்ஸ் எனும் ட்விட்டர் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அது பரவலான பயனர்களின் பார்வையை பெற்றுள்ளது.

நாளை (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 மிஷனின் இலக்காக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. தொடர்ந்து அதிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இந்த முறை லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என இஸ்ரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில் பாடலாசிரியர் வைரமுத்து, சந்திரயான்-3 குறித்த கவிதை ஒன்றை ட்வீட் செய்துள்ளார். சந்திரயான் இம்முறை நிலவில் பத்திரமாக தரையிறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ரஷ்யாவின் லூனா-25, சந்திரயான் வெற்றி மற்றும் நாளை மனிதர்கள் நிலவில் குடியேறுவது குறித்து அதில் குறிப்பிட்டுள்ளார்.

“நேரம் நெருங்க நெருங்க
மூளைக்குள் வட்டமடிக்கிறது
சந்திரயான்

நிலவில் அது
மெல்லிறக்கம் கொள்ளும்வரை
நல்லுறக்கம் கொள்ளோம்

லூனா நொறுங்கியது
ரஷ்யாவின் தோல்வியல்ல;
விஞ்ஞானத் தோல்வி

சந்திரயான் வெற்றியுறின்
அது இந்திய வெற்றியல்ல;
மானுட வெற்றி

ஹே சந்திரயான்!
நிலவில் நீ மடியேறு
நாளை நாங்கள் குடியேற” என வைரமுத்து அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x