Published : 30 Jul 2023 06:18 PM
Last Updated : 30 Jul 2023 06:18 PM

இந்தியாவில் ரூ.100 கோடியை நோக்கி ‘Oppenheimer’ - எதிர்ப்புக்கு இடையே வசூல் குவிப்பு

மும்பை: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இந்தியாவில் ரூ.100 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

‘அணுகுண்டின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ‘உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்’ என்று வரும் பகவத் கீதை வரி இப்படத்தின் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது. படத்தின் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் ஒரு காட்சியில் இந்த வரிகள் இடம்பெறுகின்றன.

இதற்கு சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் வெட்டப்பட்டு இந்தியாவில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மேற்சொன்ன காட்சியை கத்தரிக்காமல் விட்டது ஏன் என்று சென்சார் வாரியத்துக்கு பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தொடர்ந்து #BoycottOppenherimer என்ற ஹேஷ்டேகும் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் இந்தியாவில் இதுவரை ரூ.84 கோடி வசூலித்துள்ளது. இப்படம் வெளியான முதல் வாரத்தில் ரூ.77 கோடி வசூலித்திருந்தது. இரண்டாவது வார இறுதியில் இப்படம் ரூ.7 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் இப்படம் ரூ.100 கோடியை தாண்டும் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x