Published : 16 Jul 2023 12:19 PM
Last Updated : 16 Jul 2023 12:19 PM

பிரதமர் மோடி, நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்த பிரான்ஸ் அதிபர் - வைரலாகும் புகைப்படம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாதவனுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13, 14-ம் தேதிகளில் பிரான்ஸில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டின் தலைநகர் பாரிஸில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய தின விழாவில் அவர் பங்கேற்றார். அன்றிரவு பாரிஸில் அமைந்துள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் இந்தியாவிலிருந்து நடிகர் மாதவனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விருந்தின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாதவனுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விருந்தில் கலந்து கொண்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் மாதவன் கூறியிருப்பதாவது:

ஜூலை 14, 2023 அன்று பாரிஸில் நடந்த பாஸ்டில் தினக் கொண்டாட்டத்தின் போது, இந்தியா - பிரான்ஸ் உறவுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் நன்பை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில், அதிபர் இம்மானுவேல் மேக்ரானால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சியில், இந்த உலகத் தலைவர்கள், இந்த நட்பு நாடுகளின் எதிர்காலத்திற்கான தங்கள் பார்வையை ஆர்வத்துடன் விவரித்தபோது நான் மிகவும் வியந்துபோனேன். அவர்களின் நேர்மறையான மற்றும் பரஸ்பர மரியாதை ஒரு அன்பான அரவணைப்பு போல இருந்தது. அவர்களின் பார்வையும் கனவுகளும் பொருத்தமான நேரத்தில் பலனளிக்க நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

அதிபர் மேக்ரான் ஆர்வத்துடன் எங்களுக்காக ஒரு செல்ஃபி எடுத்தார். அந்த படத்தின் தனித்துவம் மற்றும் தாக்கம் இரண்டுக்காகவும் என் மனதில் என்றென்றும் பதிந்திருக்கும் ஒரு தருணம் இது. பிரான்சும் இந்தியாவும் என்றென்றும் இணைந்து வளரட்டும்.

இவ்வாறு மாதவன் தனது பதிவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x