Published : 15 Jun 2023 08:05 PM
Last Updated : 15 Jun 2023 08:05 PM

மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழாவில் பேனர், கட் அவுட் கூடாது: நடிகர் விஜய்

சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற உள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா அன்று பொது வெளியில் பேனர், கட் அவுட்கள் வைக்கக் கூடாது என நடிகர் விஜய் தன்னுடைய மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை ஜூன் 17-ம் தேதி வழங்கவுள்ளார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியன்று பொது வெளியில் பேனர், கட் அவுட்டுகள் வைக்கக் கூடாது என ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அன்று தமிழ்நாடு முழுவதும் இருந்து வரக்கூடிய மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என 5 ஆயிரம் பேருக்கும் காலை உணவு மற்றும் மதிய உணவாக பிரியாணியும் வழங்கப்படவுள்ளது.

விஜய் அறிவுறுத்தலை அடுத்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கும் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x