Published : 21 Mar 2025 05:32 AM
Last Updated : 21 Mar 2025 05:32 AM

போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கோப்புப் படம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 8 கோட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழகங்களில் கடந்த 2015 மார்ச் மாத நிலவரப்படி 1.44 லட்சம் பணியாளர்கள் இருந்தனர். அதற்கு பிறகு புதிதாக பணி நியமனம் செய்யப்படாததால், ஓய்வுபெற்றவர்கள் நீங்கலாக தற்போது 1.10 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இந்த காலகட்டத்தில் விரைவு போக்குவரத்து கழகத்தில் மட்டும் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

புதிய நியமனம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இதுதொடர்பான அறிவிப்பை தமிழக சாலை போக்குவரத்து நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் 8 கோட்டங்களில் 3,274 ஓட்டுநர் உடன் நடத்துநர் (டிசிசி) பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364, விரைவு போக்குவரத்து கழகத்தில் 318, கோட்ட வாரியாக விழுப்புரம் 322, கும்பகோணம் 756, சேலம் 486, கோவை 344, மதுரை 322, திருநெல்வேலியில் 362 பணியிடங்கள் உள்ளன.

தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி: 2025 ஜூலை 1-ம் தேதி 24 வயது பூர்த்தியடைவோர் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. தமிழில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம், குறைந்தபட்சம் 18 மாத அனுபவம், முதலுதவி சான்று, பொதுப்பணி வில்லை, நடத்துநர் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரம், 50 கிலோ எடை இருக்க வேண்டும். அரசு விதிப்படி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பணியில் சேர தகுதி, விருப்பம் உள்ளவர்கள் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக ரூ.1,180 செலுத்தி மார்ச் 21-ம் தேதி (இன்று) முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.590 செலுத்த வேண்டும். ஏப்ரல் 21-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். எழுத்து, செய்முறை தேர்வுகள், நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு குறித்த விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x