Published : 15 Jul 2024 05:37 AM
Last Updated : 15 Jul 2024 05:37 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு: நல்ல அணுகுமுறை; அறிவுக்கு வழிகோலும் நேர்த்தியான கேள்விகள்

கோப்புப்படம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. 300 மதிப்பெண்கள் கொண்ட 200 கேள்விகள்; தவறான விடைக்கு மதிப்பெண் குறைவு இல்லை. அத்துடன், கேள்விக்கான விடைகளில் 'தெரியவில்லை' என்கிற வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதால் எல்லாத் தேர்வர்களும் கட்டாயம் எல்லாக் கேள்விகளுக்கும் விடை அளித்தாக வேண்டும். ஏற்றுக் கொள்ளக் கூடிய நிபந்தனைதான்.

குரூப்1 முதல் நிலைத் தேர்வின் வினாத்தாள் இம்முறை மிகவும் சிறப்பாய், ‘பண்பட்டதாய்’ இருந்தது.விரிந்த பரவலான அறிவுக்கு வழிகோலும் தேர்வாக அமைந்து நல்லநம்பிக்கையைத் தோற்றுவித்தமைக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை மனதாரப் பாராட்டலாம்.

அறிவியல், சுற்றுச்சூழல், கணிதம், வரலாறு, இலக்கியம், அரசியல், ஆன்மிகம் அரசமைப்புச் சட்டம், நடப்புநிகழ்வுகள் உள்ளிட்ட எல்லா பிரிவுகளில்இருந்தும் நல்ல தரமான வினாக்கள்இடம் பெற்றிருந்தன. இளம் தேர்வர்களுக்கு, குறிப்பாக முதன்முறையாகப் போட்டித் தேர்வு எழுதுவோருக்கு, பல வினாக்கள் கடினமானதாக இருந்திருக்கக் கூடும். அந்த வகையில், இந்தத் தேர்வு ‘அனுபவ’ தேர்வர்களுக்குச் சற்றே சாதகமானது எனலாம்.

அறிவியல் பகுதியில் பாடப் புத்தகங்களுக்கு அப்பாலும் சில பொருள் பொதிந்த கேள்விகள் இடம் பெற்றுள்ளன. கக்குவான் இருமலை உருவாக்கும் நோய்க் கிருமி எது? மான்டாக்ஸ் சோதனை எந்த நோயைக் கண்டுபிடிக்க உதவுகிறது? மின்மாற்றியின் தத்துவம், பேரிடர் பண்புகள் குறித்த வினாக்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

வரலாறு / பிரமுகர்கள் தொடர்பான கேள்விகள், மகாத்மா காந்தி, ராணி லட்சுமி பாய், மங்கள் பாண்டே, மதுரை காந்தி, ‘தட்சிணா காந்தி’, ராவ் பகதூர் பன்னீர் செல்வம், வாஞ்சி நாதன், திராவிட இயக்கத் தலைவர்கள் என்று பரவலாக இந்தியா முழுமையும் உள்ளடக்கி இருக்கிறது.

தமிழ் இலக்கியம் குறிப்பாக திருக்குறள் மீதான கேள்விகளில் பல மிகவும் எளிமையாக இருக்கின்றன. உதாரணத்துக்கு - திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை எனப்படுகிறது? யாருடைய செல்வத்தை வள்ளுவர் நீர் நிறைந்த ஊருணியோடு ஒப்பிடுகிறார்? “இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ - எவை இரண்டும்”? உடுக்கைஇழந்தவன் கைபோல’ என்று எதனை ஒப்பிடுகிறார்? சற்றே கடினமான வினாக்களும் உண்டு.

பாண்டிய, சேர, சோழ மன்னர்களின் பட்டங்களைப் பொருத்துக, உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறும் செய்தி, தமிழ்நாட்டில் உள்ள ஆற்றுப்படுகைகள் எத்தனை? இந்திய நதிகளுள் அதிக ஆற்றுப் படுகையைக் கொண்டது எது? மற்றும் பேரிடர்கள், சரளை மண், அதிக மழைப்பொழிவு தொடர்பான கேள்விகள், தேர்வர்களின் அறிவுத்திறனுக்கும் குரூப்1 தேர்வுக்கும் மிகவும் உகந்தவை.

பொருளாதாரம் மற்றும் அரசின் திட்டங்கள் பகுதியில், தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடு, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு உதவி, கோவிட் 19-க்குப் பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் குறிக்கோள் ஆகியன மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. அதே சமயம்,15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள், நிதி ஆயோக் அறிமுகப்படுத்திய குறியீடுகள், ஆயுஷ் அமைப்பு, ஜி20 அமைப்பு, இந்திய அரசின் பிரதம மந்திரி திட்டங்கள் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் முக்கியத்துவம், ஆனையத்தின் நடுநிலை அணுகுமுறைக்கு அத்தாட்சியாய் இருக்கின்றன.

அரசமைப்பு சட்டம் பகுதியில், அரசுக் கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகள் (பாகம் 4) அடிப்படைக் கடமைகள் (பாகம் 4ஏ) ஆகியன குறித்த கேள்விகள் மிகுந்த மன நிறைவைத் தருகின்றன. இத்துடன், இந்திய ஜனாதிபதி தேர்தல், அடிப்படைக் கட்டமைப்புடன் தொடர்பில்லாத வழக்கு, கட்டாய இலவசக் கல்வி, சுரண்டலுக்கு எதிரான உரிமை, மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி இழப்பு, இந்திய நீதியம், மாநிலத் தகவல் ஆணையம் உள்ளிட்ட பல அம்சங்களையும் உள்ளடக்கிய விசாலமான பார்வை - வெகு சிறப்பு.

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாத்தல், குழந்தை வளர்ச்சிக் குறியீட்டில் முன்னிலையில் உள்ள மாவட்டங்கள், (ஆதி) சங்கரர் பிறந்த இடம், அறிவியல் மனநிலை, நிதிக் கொள்கை, பணவியல் கொள்கை,பற்றாக்குறை பட்ஜெட்.. என்று வகை வகையாக, பொதுக் கேள்விகள் பரவசப்படுத்துகின்றன.

சச்சரவுக்கு உரிய ஓரிரு கேள்விகளும் இருக்கின்றன. குறிப்பாக ‘யுனெஸ்கோ விருது’ தொடர்பாகப் பலமுனைகளில் இருந்தும் கேள்விகள் எழுப்பப்படும் போது, இந்தப் பிரச்சினைக்குள் ஆணையம் நுழைந்திருக்க வேண்டியது இல்லை. இந்தக்கேள்விக்கு பதிலாக வேறு நல்ல கேள்வியைத் தேர்ந்தெடுத்து தலைவருக்குப் பெருமை சேர்த்து இருக்கலாம். இதிலே ஒரு வேடிக்கை – தமிழில் ‘தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்று உள்ளது. ஆங்கிலத்தில் தெற்கு ஆசியா (சவுத் ஆசியா) என்று தரப்பட்டுள்ளது! வினாத்தாளில் பல இடங்களில்ஆங்கில வடிவத்தில் ஏராளமான பிழைகள். தமிழிலும் சில இடங்களில் பிழைகள் உள்ளன. பிழைகளற்ற வினாத்தாளை உறுதி செய்வதில் ஆணையத்துக்கு என்ன சிரமம் இருக்க முடியும்..?ஏன் இந்த அலட்சியம்..? விளங்கவில்லை.

இனி.. இம்முறை ஒன்று அல்ல; ‘வித்தியாசமான’ சுவாரஸ்யமான கேள்விகள் மூன்று உள்ளன: மூன்று வெவ்வேறு சாலை சந்திப்புகளில் உள்ள போக்குவரத்துக் குறியீட்டு விளக்குகள் (சிக்னல்)முறையே 48வி, 72வி, 108 வினாடிகளில் மாற்றம் அடைகின்றன. 3 சந்திப்புகளில் உள்ள விளக்குகளும் ஒரே சமயத்தில் 8:20:00 மணிக்கு மாற்றம் அடைகிறதுஎனில் அடுத்த முறை அவை, இணைந்துமாற்றம் அடைவது எப்போது..?

2023 டிசம்பரில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவில் மிகவும் பாதிக்கப்பட்ட பறவை எது?

நிறைவாக, (இலவச) தொலைபேசி எண்கள்: குழந்தைகள் உதவி எண், பெண்கள் உதவி எண், சைபர் கிரைம் உதவி எண் – என்னென்ன..? (சபாஷ்!)

ஆணையத்தின் சிறப்பான பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x