Published : 26 Mar 2023 06:37 AM
Last Updated : 26 Mar 2023 06:37 AM

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் அடுத்த 6 மாதத்துக்குள் ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூல் - நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: டெல்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: நெடுஞ்சாலைகளில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் அடுத்த 6 மாதங்களுக்குள் கட்டண வசூல் அமல்படுத்தப்படும்.

இதன் மூலம் சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெருக்கடி குறையும். வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலையில் தாங்கள் பயணித்த தூரத்துக்கு மட்டும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சுங்ககட்டண வருவாய் தற்போது ரூ.40 ஆயிரம் கோடியாக உள்ளது. அது அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயரும்.

நெடுஞ்சாலை சுங்கச் சாவடி களில் சராசரியாக 8 நிமிடங்களாக இருந்த வாகனங்களின் காத்திருப்பு நேரம், ‘பாஸ்ட்டாக்' அறிமுகத்துக்குப் பிறகு 47 வினாடிகளாக குறைந்துள்ளது.

ஆனால் இன்றும் பல சுங்கச் சாவடிகளில், குறிப்பாக நகரங்களை ஒட்டிய சுங்கச் சாவடிகளில் நெரிசல் நேரங்களில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால்தான் புதிய முறையை அமல்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x