சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்வு

Published on

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் 126 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயர்வடைந்து 61,294 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயர்வடைந்து 18,232 ஆக இருந்தது.

வருடத்தின் இரண்டாவது வர்த்தக நாளில் பங்குச்சந்தை சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:39 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 32.56 புள்ளிகள் சரிவுடன் 61,135.23 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 24.10 புள்ளிகள் சரிவடைந்து 18,173.35 ஆக இருந்தது.

காலாண்டு நிதி குறித்த சாதகமான தகவல்கள், வங்கிகளின் தாராளமான கடன் வழங்கள் குறித்த நம்பிக்கைகள் காரணமாக வீழ்ச்சியில் இருந்து மீண்ட இந்தியப் பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக ஏற்றத்தில் நிறைவடைந்தன. முன்னதாக, உலக அளவில் நிலவிய பாதகமான சூழல் காரணமாக இன்றைய வர்த்தகத்தை சரிவுடனேயேத் தொடங்கிய இந்தியப் பங்குச் சந்தைகள் நிலையில்லாமல் ஏற்ற இறக்கத்துடனேயே பயணித்தது. வர்த்தக நேரத்தின்போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 61,344 ஆகவும், குறைந்தபட்சமாக 61,004 ஆகவும் இருந்தது. பின்னர் மீண்டு ஏற்றத்தை அடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 126.41 புள்ளிகள் உயர்வடைந்து 61,294.20 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசியb பங்குச்சந்தையில் நிஃப்டி 35.10 புள்ளிகள் உயர்வடைந்து 18,232.55 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், டெக் மகேந்திரா, சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், விப்ரோ, நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைன்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃபிசி பேங்க், ஹெச்டிஎஃபிசி, பாரதி ஏர்டெல், கோடாக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எல் அண்ட் டி பங்குகள் உயர்வில் இருந்தன. மறுபுறம் இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், அட்ல்ரா டெக் சிமெண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, என்டிபிசி, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in