Published : 03 Aug 2022 08:31 PM
Last Updated : 03 Aug 2022 08:31 PM

Money Laundering | பணச் சலவை குற்றச் செயல்களின் பின்புலம் - ஒரு பார்வை

பிரதிநிதித்துவப் படம்

தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, லஞ்சம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச் செயல்கள் மூலம், சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தை முறையான வழிகளில் ஈட்டப்பட்ட பணமாக மாற்றுவதே பணச் சலவை (Money Laundering) எனப்படுகிறது.

இது பண மோசடி / நிதி மோசடி என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. முறையற்ற வழியில் ஈட்டப்பட்ட பணம் என்னும் கறையை நீக்கும் முயற்சி என்பதால், சலவை (laundering) என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான வழிமுறைகள்: பணச் சலவை நடவடிக்கை பொதுவாக மூன்று கட்டங்களை உள்ளடக்கியது.

1. சட்டவிரோதச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வங்கிக் கணக்கு உள்ளிட்ட நிதி அமைப்புக்குள் செலுத்துதல்.

2. பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி செலுத்தப்பட்ட பணத்துக்கான ஆதாரத்தை (Source) மறைப்பது. இதன் மூலம் அந்தப் பணத்தின் மீதான ‘கறை’ நீக்கப்படுகிறது

3. இப்படிக் கறை நீக்கப்பட்ட பணத்தைச் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வது, புழக்கத்தில் விடுவது. இது பொதுவான வழிமுறை மட்டுமே. சில பணச் சலவை நடவடிக்கைகளில் இந்த மூன்று கட்டங்களும் வரிசைப்படி நடக்க வேண்டியதில்லை. இரண்டு கட்டங்கள் இணைக்கப்படலாம். ஏதேனும் ஒன்றோ அனைத்துக் கட்டங்களுமோ தொடர்ந்து பல முறை நடக்க வேண்டியிருக்கலாம்.

பணத்தின் சட்டவிரோத ஆதாரத்தை (Illegal Source) மறைப்பதற்குப் பல வழிமுறைகளும் தந்திரங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. சட்டவிரோத வழியில் ஈட்டப்பட்ட பணத்தையும் சட்டத்தால் அனுமதிக்கப்படும் தொழிலிலிருந்து ஈட்டிய வருவாயாகக் கணக்குக் காண்பிப்பது ஒரு வழிமுறை.

கணக்கில் காண்பிக்க முடியாத பணத்தைச் சிறு தொகைகளாகப் பிரித்து, பிறரிடம் கொடுத்துத் தன் வங்கிக் கணக்கில் செலுத்தவைத்து, அதன் மூலம் அந்தப் பணத்தை முறைப்படியான வருவாயாகக் கணக்குக் காண்பிப்பது இன்னொரு வழிமுறை. ரியல் எஸ்டேட், தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்வது, டிஜிட்டல் பணப் பரிமாற்றம், கிரிப்டோ நாணயங்கள், இணையவழி விளையாட்டுகள், சூதாட்டம் ஆகியவற்றின் வழியாகவும் பணச் சலவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகளாவிய தடுப்பு நடவடிக்கைகள்: தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் உலகத்தையே பாதிக்கும் பெரும் பிரச்சினைகள். பணச் சலவை வழிமுறைகள் காரணமாக இதுபோன்ற குற்றச் செயல்களின் மூலம் பணம் ஈட்டுவது குறித்த அச்சம் குறைக்கப்படுகிறது.

பணத்துக்காகக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாகிறது. குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்டு, சலவை செய்யப்பட்ட பணம் மீண்டும் அந்தக் குற்றச் செயல்களுக்கே பயன்படுத்தப்படுகின்றது. இதனால் நாடுகளின் பொருளாதாரம் சீரழிகிறது, குற்றங்கள் அதிகரிக்கின்றன.

சட்டமும் திருத்தங்களும்: பணச் சலவைத் தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act) இந்தியாவில் 2002இல் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிகள் பிறப்பிக்கப்பட்டு 2005இல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழான குற்றங்களை விசாரிப்பதற்கான அதிகாரம் அமலாக்க இயக்குநரகத்துக்கு (Enforcement Directorate) வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க இடமளிக்காமல் பண மசோதா வழியாக நிறைவேற்றப்பட்டதற்கு எதிரான வழக்கு மட்டும் பண மசோதாக்கள் தொடர்பான கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x