Published : 01 Aug 2022 10:37 PM
Last Updated : 01 Aug 2022 10:37 PM

இந்தியாவில் ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,48,995 கோடி; தமிழகத்தில் ரூ.8,449 கோடி

புதுடெல்லி: இந்தியாவில் ஜூலை மாத ஜிஎஸ்டியாக ரூ. 1,48,995 கோடி வசூலாகியுள்ளது. நாட்டில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் இரண்டாவது முறையாக இவ்வளவு அதிகபட்ச வருவாய் கிடைத்துள்ளது.

2022 ஜூலை மாதத்தில் மொத்தம் ரூ. 1,48,995 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ. 25,751 கோடி, எஸ் ஜிஎஸ்டி ரூ. 32,807 கோடி, ஐஜிஎஸ்டி ரூ. 79,518 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 41,420 கோடி உள்பட). செஸ்வரி ரூ. 10,920 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 995 கோடி உள்பட). ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபின் 2-வது முறையாக இவ்வளவு அதிகபட்ச வருவாய் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.6302 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 34 சதவீதம் அதிகரித்து, ரூ.8,449 கோடி வசூலாகியுள்ளது.

புதுச்சேரியில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.129 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 54 சதவீதம் அதிகரித்து, ரூ.198 கோடி வசூலாகியுள்ளது.

ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ. 32,365 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ. 26,774 கோடியும் அரசு வழங்கியுள்ளது. 2022 ஜூலை மாதத்தில் மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கான மொத்த வருவாய் வழக்கமான பைசலுக்கு பின் சிஜிஎஸ்டிக்கு ரூ.58,116 கோடியாகவும் எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ. 59,581 கோடியாகவும் உள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,16,393 கோடியாக இருந்த நிலையில் 2022 ஜூலை மாத வருவாய் அதைவிட 28 சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை விட சென்ற மாதம் சரக்குகளின் இறக்குமதி மூலமான வருவாய் 48 சதவீதமும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான வருவாய் (சேவைகளின் இறக்குமதி உள்பட) 22 சதவீதமும் அதிகமாக உள்ளது.

கடந்த 5 மாதங்களில் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பது ஒவ்வொரு மாதமும் சீரான அதிகரிப்பை காட்டுகிறது என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x