Published : 08 Jul 2022 04:12 PM
Last Updated : 08 Jul 2022 04:12 PM

ட்விட்டர் ஊழியர்கள் 100 பேர் பணிநீக்கம்: எலான் மஸ்க் நிபந்தனை காரணமா?

நியூயார்க்: ட்விட்டர் நிறுவனம் ஹெச்ஆர் பிரிவில் இருந்து சுமார் 100-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. ட்விட்டரை வாங்க ஒப்பந்தம் செய்துள்ள எலான் மஸ்க் செலவை குறைக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள நிலையில் அதன் ஒருபகுதியாக இந்த பணிநீக்கம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது.

எனினும் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அண்மையில் தெரிவித்து இருந்தார். இதற்கு காரணம் ட்விட்டர் கூறுவதை விட 4 மடங்கு போலி கணக்குகள் இருப்பதாகவும், தேவையற்ற செலவுகளால் லாபமற்ற நிறுவனமாக ட்விட்டர் இருப்பதாகவும் மஸ்க் கூறியிருந்தார். இதனால் ஒப்பந்தம் முடிந்தாலும் அது செயல்பாட்டுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பணிநீக்கம்

அதேசமயம் ஜூன் மாதம் ட்விட்டர் ஊழியர்களுடன் மஸ்க் தனது முதல் சந்திப்பை நடத்தினார். அப்போது நிறுவனம் நிதி ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் செலவைக் குறைக்க வேண்டும் என்றும் கூறினார். இப்போது செலவுகள் வருவாயை விட அதிகமாக உள்ளன என்று மஸ்க் ஊழியர்களிடம் கூறினார். இதனால் ட்விட்டர் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஊழியர்கள் சில அச்சம் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் ட்விட்டர் தனது ஹெச்ஆர் பிரிவில் இருந்து சுமார் 100-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இதுமட்டுமின்றி செலவுகளைக் குறைக்க ஏற்கெனவே புதிய ஊழியர்களைச் தேர்வு செய்யும் பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இதனை ஹெச்ஆர் அணிக்கு வேலை குறைந்துள்ள காரணத்தால் சுமார் 100க்கும் அதிகமாக ஊழியர்கள் பணிநீக்கம் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக ட்விட்டரும் உறுதி செய்துள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x