விமான கட்டணங்களை மாதந்தோறும் அரசு கண்காணிக்கிறது - அமைச்சர் வி.கே.சிங் தகவல்

விமான கட்டணங்களை மாதந்தோறும் அரசு கண்காணிக்கிறது - அமைச்சர் வி.கே.சிங் தகவல்

Published on

புதுடெல்லி: அறிவிக்கப்பட்டதை விட விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்ய, சில வழித்தடங்களின் விமான கட்டணங்களை, ஒவ்வொரு மாதமும் விமான போக்குவரத்து இயக்குநரகம் கண்காணிக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: விமான கட்டணங்கள் அரசாங்கத்தால் ஒழுங்குமுறைப்படுத்தப்படவில்லை. விமான போக்குவரத்து விதிகள் 1937ன் கீழ், 135ன் துணை விதி (1)ன் படி விமான நிறுவனங்கள் நியாயமான கட்டணத்தை தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்ளலாம். அந்த விமான கட்டணங்கள் விமான நிறுவனங்களின் இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன.

கூடுதல் கட்டணம், திடீர் கட்டண உயர்வு ஆகியவற்றை தடுக்கவும், கட்டணநிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும், விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் விமான போக்குவரத்து சுற்றறிக்கையை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், வழித்தடம் வாரியாக, பல பிரிவுகளின் கீழ் சந்தை நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றையும் விமான நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும்.

விமான நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணங்களை வசூலிக்காம் இருப்பதை உறுதி செய்ய, சில வழித்தடங்களின் விமான கட்டணங்களை விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in