புதிதாக 7 ஆயிரம் உணவகங்கள்; 10 கோடி ஆர்டர்கள்: கோவிட் காலத்திலும் ஸ்விக்கியின் அதிரடி

புதிதாக 7 ஆயிரம் உணவகங்கள்; 10 கோடி ஆர்டர்கள்: கோவிட் காலத்திலும் ஸ்விக்கியின் அதிரடி

Published on

தங்கள் சேவையில் புதிதாக மாதம் 7000 உணவகங்களை இணைத்துள்ளதாகவும், ஊரடங்கு ஆரம்பித்த தினத்திலிருந்து தற்போது வரை மொத்தம் 10 கோடி ஆர்டர்களை முடித்திருப்பதாகவும் ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஊரடங்குக்கு முன்பு மாதம் 4000 உணவகங்கள் என்றிருந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. மேலும், 7000 உணவகங்களில் 6000 உணவகங்கள் சிறிய மற்றும் நடுத்தர நிலையில் இருப்பவை. உயர் மட்ட உணவகங்கள் ஸ்விக்கி சேவையில் இணைவது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நெருக்கடி காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ஸ்விக்கி உள்ளிட்ட சேவைகள் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இதில் கிட்டத்தட்ட ஊரடங்கு காலத்துக்கு முந்தைய நிலையில் 80-85 சதவிதம் அளவு நெருங்கிவிட்டதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இது 95 சதவிதமாகவும், சில இடங்களில் 100 சதவீதத்துக்கு அதிகமாகவும் மீண்டுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபிஎல் சீஸனை முன்னிட்டு முக்கிய நகரங்களில் ஸ்விக்கி சேவையின் பயன்பாடு கோவிட்டுக்கு முந்தைய நிலைக்கு வந்துள்ளது.

இதில் பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகியவை முதன்மையான மெட்ரோ நகரங்களாகவும், அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ ஆகிய பகுதிகள் இரண்டாம் நிலையில் இருக்கும் நகரங்களில் முதன்மையாகவும் ஸ்விக்கி சேவையை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இதில் பல வாடிக்கையாளர்கள் ஊரடங்கு சமயத்தில், நகரங்களிலிருந்து இரண்டாம், மூன்றாம் நிலை பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துள்ளதால், அங்கு ஸ்விக்கி சேவை அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in