Published : 11 Dec 2014 11:56 AM
Last Updated : 11 Dec 2014 11:56 AM
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டுவதற்கு அடிப்படைக் கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறினார்.
நேற்று நடைபெற்ற டெல்லி பொருளாதார மாநாட்டில் அவர் மேலும் பேசியது:
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாக முன்னேறி 8 சதவீத அளவுக்கு உயர வேண்டுமெனில் அதற்கு அடிப்படைக் கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இந்த இலக்கை எட்டுவதன் மூலம் அடுத்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயரும் என்று அவர் குறிப்பிட்டார்.
இப்போது நம்மிடையே உள்ள 2 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தின் மூலம் ஸ்திரமான வளர்ச்சியோடு 8 சதவீத இலக்கை எட்ட முடியும். இத்தகைய வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயரும். அப்போது நமது பொருளாதாரம் 4 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயரும். டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு வலுவடையும்போது இது 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு வளரும் என்று சுட்டிக் காட்டினார். அடிப்படை கட்டமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதோடு பணவீக்கத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில்
நமது பொருளாதார வளர்ச்சி 8 சதவீத அளவுக்கு உயரும் என்றார். அடுத்த சில ஆண்டுகளுக்குள் நமது பணவீக்கத்தை 4 சதவீதம் முதல் 6 சதவீத அளவுக்குள் கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றார்.
பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டு வருவதுதான் அரசின் முன்னுள்ள பிரதான பணி என்று குறிப்பிட்ட அவர், சர்வதேச தரத்திலான கட்டமைப்புகளை உருவாக்குவது, இளம் தொழில் முனைவோரை ஊக்குவிப்பது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரித்து வரும் நிலையில் பொருள் விநியோக நிலையை சீரமைக்க வேண்டிய அவசியமும் எழுந்துள்ளதாக அவர் கூறினார்.
மார்ச்சில் முடிவடையும் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீத அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய இரண்டு நிதி ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT