Last Updated : 10 Dec, 2014 11:11 AM

 

Published : 10 Dec 2014 11:11 AM
Last Updated : 10 Dec 2014 11:11 AM

2016 ஏப்ரலில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமல்: மாநிலங்களவையில் அமைச்சர் உறுதி

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) முறையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இது அமலுக்கு வரும் என்று மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தொடர்பாக மாநில அரசுகள் எழுப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் மத்திய அரசு தீர்வு கண்டுள்ளது. இதனால் இப்புதிய வரி விதிப்பு முறை 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றார்.

இப்புதிய வரி விதிப்பு முறையால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பு ஈடு செய்யப்படும் என்று குறிப்பிட்ட அவர், படிப்படியாக பெட்ரோலியப் பொருள்கள் மீதும் இந்த வரி விதிப்பு கொண்டு வரப்படும் என்றார்.தொடக்கத்தில் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி மிகக் குறைவாக இருக்கும். இதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பு குறையும். பிறகு படிப்படியாக பெட்ரோலிய பொருள்களுக்கு வரி விதிக்கப்படும் என்றார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் மேலும் கூறியது:

ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால் மறைமுக வரிகளான உற்பத்தி வரி, சேவை வரி ஆகியன விதிக்கப்படாது. மத்திய அரசு விதிக்கும் இவ்விரு வரிகளும் இல்லாமல் போகும். அதேபோல மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்டவையும் விலக்கிக் கொள்ளப்படும். ஒரு முனை வரி விதிப்பை கொண்டு வருவதற்காக ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

ஜிஎஸ்டி அமலாக்க மசோதா 2011-ம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இது காலாவதியாகிவிட்டதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதை மீண்டும் கொண்டு வர வேண்டும். பெட்ரோலியம், மதுபானம் மற்றும் புகையிலைப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத் துகின்றன. ஜிஎஸ்டி அமலாக்கம் பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசுகள் உரிய ஒத்துழைப்பு அளிக்காததே காரணமாகும்.

இந்த வரி விதிப்பு முறை காரணமாக மாநில அரசுகளின் வரி வருமானம் குறைந்து போகும் என்பதால் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இப்போது பாஜக தலைமையிலான அரசு தீர்வு கண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x