Published : 01 Nov 2014 11:03 AM
Last Updated : 01 Nov 2014 11:03 AM

தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை : சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

இந்திய பங்குச்சந்தைகள் 2 சதவீத அளவுக்கு நேற்றும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டன. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேலே உயர்ந்தது.

வர்த்தகத்தின் இடையே 547 புள்ளிகள் உயர்ந்து 27984 என்ற உச்சபட்ச புள்ளியை தொட்டது. வர்த்தகத்தின் இடையில் 519 புள்ளிகள் உயர்ந்து 27965 புள்ளியில் முடிவடைந்தது.

இதே போல வர்த்தகத்தின் இடையே நிப்டி 161 புள்ளிகள் உயர்ந்து 8330 என்ற அதிகபட்ச புள்ளியை தொட்டது. வர்த்தகத்தின் முடிவில் 153 புள்ளிகள் உயர்ந்து 8322 என்ற புள்ளியில் முடிவடைந்தது.

முக்கிய குறியீடுகள் 2 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தாலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் இந்த அளவுக்கு உயரவில்லை. மிட்கேப் குறியீடு 1.58 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.96 சதவீதமும் உயர்ந்து முடிந்தது.

பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை நீட்டிப்பதாக ஜப்பான் மத்திய வங்கி அறிவித்தது, பங்கு சந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இதனால் ஜப்பான் பங்குச்சந்தை குறியீடான நிக்கி 7 வருட உச்சபட்ச புள்ளியை தொட்டது.

நிக்கி 4.83 சதவீதம் உயர்ந்து முடிந்தது. இதற்கு முன்பு 2007 நவம்பரில் இந்த நிலையில் இருந்தது. ஐரோப்பிய சந்தைகளும் உயர்ந்தே வர்த்தகத்தை தொடங்கின.

நுகர்வோர் பொருள் தயாரிப்பு துறையை தவிர மற்ற அனைத்து துறை குறீயிடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன.

இதில் கேபிடல் குட்ஸ் குறியீடு 2.66 சதவீதம் உயர்ந்தது. இதற்கடுத்து இன்பிரா, ஆயில் அண்ட் கேஸ், பி.எஸ்.யூ. ஆகிய குறியீடுகள் உயர்ந்தன. கன்ஸ்யூமர் டியுரபிள் குறியீடு 3.18 சதவீதம் சரிந்தது.

சென்செக்ஸ் பங்குகளில் கெயில், டாடா பவர், ஹெச்.டி.எப்.சி, எல் அண்ட் டி மற்றும் டாடா ஸ்டீல், ஆகியவை அதிகம் உயர்ந்தவையாகும். 30 பங்குகள் இருக்கும் சென்செக்ஸ் பட்டியலில் பார்தி ஏர்டெல் மட்டும் சரிவில் முடிந்தது.

வியாழன் வர்த்தகத்தின் இந்திய பங்குச்சந்தையில் 1,257 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு இருந்தது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x