Published : 13 Mar 2014 10:29 AM
Last Updated : 13 Mar 2014 10:29 AM

ஆம் ஆத்மி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் மீது ஆம் ஆத்மி கட்சி கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய பெட்ரோலியம் அமைச்சர்களாக இருந்த மணி சங்கர் அய்யர், ஜெய்ப்பால் ரெட்டி ஆகியோர் பதவி விலக ரிலை யன்ஸ் நிறுவன நிர்பந்தமே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், ஆம் ஆத்மி கட்சி பொய்யான தகவல்களை பிரசாரம் செய்து வருகிறது. அது கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்று குறிப்பிட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் கிருஷ்ணா கோதாவரி படுகையில் (கேஜி- டி6) கூடுதலாக முதலீடு செய்வதற்கு மணிசங்கர் அய்யர் எதிர்ப்பு தெரிவித்தார் அதனால் அவர் பதவியிலிருந்து வெளியேற்றப் பட்டார் என ஆம் ஆத்மி கூறுகிறது. மணி சங்கர் அய்யர் 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி விலகினார். ஆனால் இந்த எண்ணெய் வயலில் 880 கோடி டாலர் முதலீட்டு விரிவாக்கம் தொடர்பான திட்ட அறிக்கை அக்டோபர் 2006-ல்தான் தாக்கல் செய்யப்பட்டது என்று ரிலையன்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

இதேபோல எரிவாயு விலை ஏற்றத்துக்கு ஜெய்ப்பால் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்தான் எரிவாயு விலை நிர்ணயம் செய்வதற்காக டாக்டர் ரங்கராஜன் குழுவை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் அக்குழு தனது பரிந்துரையை அளித்தது. இந்த பரிந்துரையை மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு 2014 ஏப்ரல் முதல் அமல்படுத்த ஒப்புக் கொண்டது என்றும் குறிப்பிட்டுள் ளது.

உள்நாட்டில் உற்பத்தியாகும் எரிவாயுவின் விலை சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் விலைக்கு சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உள்நாட் டில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் இறக்குமதி குறையும் என்று ரங்கராஜன் குழு பரிந்துரை செய்திருந்ததையும் ரிலையன்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

இக்குழு பரிந்துரைப்படி ஏப்ரல் முதல் ஒரு யூனிட்டுக்கு 8 டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது ஒரு யூனிட் விலை 4.205 டாலராக உள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு எரிவாயு விலை உயர்த் தப்படவில்லை. ஏற்கெனவே ரங்க ராஜன் குழு அளித்த பார்முலா படி வகுக்கப்பட்ட விலைதான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கூடுதலாக ரூ. 54 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என ஆம் ஆத்மி கூறிவருகிறது. இந்த விலை உயர் வால் அரசுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி ராயல்டியாகக் கிடைக்கும். மேலும் வரி, ஈவுத் தொகை போன்றவையும் அரசுக்குக் கிடைக்கும் என்று ரிலையன்ஸ் சுட்டிக் காட்டி யுள்ளது.

ரிலையன்ஸ் மற்றும் அதன் பங்குதாரர்களின் பங்கு ரூ. 3,000 கோடிதான். ஆம் ஆத்மி குறிப்பிடுவது போல ரூ. 54,500 கோடி அல்ல. மேலும் கேஜி-டி6 எண்ணெய் வயலில் கிடைக்கும் எரிவாயு நாட்டின் ஒட்டுமொத்த எரிவாயு உற்பத்தியில் வெறும் 15 சதவீதம் மட்டுமே என்றும் ரிலையன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x