Published : 07 Oct 2013 12:16 PM
Last Updated : 07 Oct 2013 12:16 PM
ஆயுள் காப்பீடு என்பது சில துரதிர்ஷ்டசாலிகளை அதிர்ஷ்டசாலிகள் பலர் பாதுகாப்பதாகும். இதன் மூலம் நாம் முகம் தெரியாத ஒருவருக்கு உதவி செய்கிறோம். இதுவும் ஒரு வகையான சேவை போன்றதுதான்.
இன்று பெரும்பாலோர் மற்றவர்களின் வற்புறுத்தலின் மூலமே ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி) எடுக்கிறார்கள். காப்பீடு செய்து கொள்வதில் உள்ள பயனை இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு ஆக முடியாது அது ஒரு பாதுகாப்பே.
மேலும் இன்சூரன்ஸ் ஒரு நீண்ட கால கமிட்மெண்ட். நாம் இடையில் வெளியேற முடியாது. உதாரணமாக இது 20 முதல் 25 வருட பிளான். நமக்கு கிடைப்பதோ 5.5% முதல் 6% வரை தான். இதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. முன்பே சொன்ன மாதிரி இன்ஷூரன்ஸ் என்பது நம்முடைய ரிஸ்க்கினை மற்றவருக்கு மாற்றுவதே.
பொதுவாக மக்களுக்கு ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே பாதுகாப்பு என்ற எண்ணமும், மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறது. அது மிகவும் தவறானது ஏனென்றால் எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை.
நிறைய பேருக்கு நம்மிடம் தான் போதுமான பணம் உள்ளதே எதற்கு நமக்கு இன்சூரன்ஸ் என்ற கேள்வி உள்ளது. அதற்கான பதில் இது தான்.
ஒரு வேளை நாம் இறந்தால், நம்முடைய குடும்பம் தற்போழுது உள்ள நிலையிலே இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த நிதிச் சிக்கலில் இருந்து விடுபட நம் எல்லாருக்கும் தேவையான ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
இன்று பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கிறார்கள் ஆனால் தேவையான இன்சூரன்ஸ் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. மேலும் பலருக்கு எவ்வளவு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை. சிலர் 5 பாலிசிகள் கூட வைத்திருப்பார்கள், ஆனால் போதுமான தொகைக்கு எடுத்திருக்க மாட்டார்கள். இன்ஷூரன்ஸில் பல வகை உள்ளது. மிகவும் பிரபலமானது என்றால் அது எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் மணிபேக் பாலிசி. இது நீண்ட கால பிளான் 20 முதல் 25 வருடம் வரை. ஆனால் வட்டி குறைவு மேலும் சரண்டர் செய்தால் நாம் நிறைய பணம் இழக்க வேண்டி வரும்.
உதாரணமாக நம்முடைய காலில் சிறிய கட்டி வந்தவுடன் அதை அப்புறப்படுத்தாமல் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்றால் காலையே எடுக்கவேண்டி வரும். முதலிலே இந்த மாதிரி எண்டோவ்மென்ட் பாலிசியை புரிந்து கொண்டால் சரண்டர் செய்வது நல்லது. தெரிந்தும் 20 வருடம் கட்டுவது காலை இழப்பதற்குச் சமமாகும்.
பணத்தை இழக்க விரும்பாமல் 20 வருடம் கட்டிய பின்பு வரும் தொகை மிகக் குறைவு. எனவே இந்த மாதிரி பாலிசியைத் (traditional) தவிர்ப்பது நல்லது.
அடுத்ததாக ULIP பாலிசி இது. இது பங்குச் சந்தையின் போக்கிற்கேற்ப நம்முதலீடு இறங்குவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த பாலிசியில் ப்ரீமியம் அதிகம் ஆனால் லைப் இன்ஷுரன்ஸ் கவரேஜ் குறைவு. இதையும் தவிர்ப்பது நல்லது.
பின்பு எதுதான் நல்ல பாலிசி என்கிறீர்களா? டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி தான்.
உதாரணமாக ஒருவருக்கு 30 வயது என்று எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு 60 வயது வரை கவர் செய்யக்குடிய டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்கும்பட்சத்தில், பிரீமியமாக 18,000 ருபாய் செலுத்தினால் போதும்.
தற்போழுது ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ் வந்து விட்டது. இதற்கு முகவர்கள் உதவ மாட்டார்கள். நாமே எல்லாவிதமான கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்ல வேண்டும். இது பெரும்பாலும் விஷயம் தெரிந்தவர்களுக்கு பயன்படும். பொதுவாக ஒருவருடைய வருட சம்பளத்தில் 12 முதல் 15 மடங்கு அளவுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. ஒருவர் வருடம் 5 லட்சம் சம்பாதித்தால் அவர் 60 முதல் 75 லட்சம் வரை டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து கொள்வது நல்லது.
பிரீமியம் குறைவு என்றவுடன் எல்லோரும் ஒ.கே. என்று சொல்லுவீர்கள், பின்பு நீங்கள் உயிரோடு இருந்தால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது என்று சொன்னால் எனக்கு இந்த பாலிசி வேண்டாம் என உடனே சொல்லிவிடுவார்கள். இது தவறு. சரியான பாலிசியை தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்வது நல்லது.
பா.பத்மநாபன் - padmanaban@fortuneplanners.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment