Published : 24 Oct 2013 11:50 AM
Last Updated : 24 Oct 2013 11:50 AM

அதிகரிக்கும் கார்ப்பரேட் மோசடி

இந்தியாவில் செயல்படும் மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் பல்வேறு வகையான ஏமாற்று வலையில் சிக்குகின்றன. நிறுவனங்களுக்குள்ளேயே உள்ளவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளால் பல நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாக சர்வதேச நிறுவனங்களில் நடைபெறும் மோசடி குறித்து திரட்டப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

சர்வதேச ஃபிராட் ரிபோர்ட் எனப்படும் அறிக்கை (2013-14) புதன்கிழமை மும்பையில் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் மொத்தம் 900 மூத்த செயல் அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து 51 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அதிகாரி களிடம் கருத்து கேட்டபோது மோசடி செய்வதற்கான வாய்ப்புகளும், அதற்கான சூழ்நிலைகளும் அதிகரித்து விட்டதாக 71 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே கருத்தை 67 சதவீதம்பேர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் 69 சதவீத நிறுவனங்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு வகையான மோசடியில் சிக்குவதாக ஜிஎப்ஆர் தெரிவித்துள்ளது. இவைகள் 7-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான மோசடிகளில் சிக்கியதாகத் தெரிகிறது.

நிறுவனங்களின் சொத்துகளை திருடுவதால் 33 சதவீத நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் இது 28 சதவீதமாக உள்ளது.

ஊழல், லஞ்சம் இவற்றால் பாதிக்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை 24 சதவீதமாக உள்ளது. சர்வதேச அளவில் இது 14 சதவீதமாக உள்ளது.

நிறுவனங்களுக்கு உள்ளேயே உள்ளவர்களால் நடத்தப்படும் நிதி முறைகேடுகளில் 22 சதவீத நிறுவனங்கள் சிக்குவதாக அறிக்கை தெரிவிக்கிறது. சர்வதேச அளவில் இது 16 சதவீதமாக உள்ளது.

ஊழல் பின்னணியில் பல இந்திய நிறுவனங்கள் செயல்படுவதாக கரோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ரேஷ்மி குராணா தெரிவித்தார்.

தங்கள் நிறுவனம் ஊழலில் சிக்கியதாக 33 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x