Published : 03 Aug 2014 10:00 AM
Last Updated : 03 Aug 2014 10:00 AM
விவசாயிகள் நலனே முக்கியம்; உலக வர்த்தக அமைப்புடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் நலனை சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவின் வலுவான நிலைப்பாடு ஜெனீவா நகரில் உலக வர்த்தகஅமைப்பு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அருண் ஜேட்லி பேசும்போது, “உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை நாம் எடுக்கவிருக்கிறோம். முந்தைய அரசின் கொள்கைகளை நாம் பின்பற்றினால் நமது சிறு விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படும்.
நம்மை பொறுத்தவரை விவசாயிகள் நலனே முக்கியம். அரசுக்கு நிறைய நெருக்கடி இருந்தபோதும், உலக வர்த்தக அமைப்பின் அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்போம். ஆனால் ஏழை விவசாயிகளின் நலன்களை சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம்.
நாட்டின் சிறு விவசாயிகள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். சாகுபடிக்கு அவர்கள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். சமயங்களில் கடனை செலுத்த முடியாமல் போகும்போது தற்கொலைக்கு கூட தள்ளப்படுகிறார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT