Published : 20 Mar 2025 07:05 PM
Last Updated : 20 Mar 2025 07:05 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் ரூ.36 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பிலான தரச்சான்று அளிக்கப்படாத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் பிஐஎஸ் சட்டம் 2016 மீறப்படுவதாக இந்திய தரநிர்ணய அமைவனத்துக்கு (பிஐஎஸ்) சமீபத்தில் புகார் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், இந்திய தரநிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் இரு குழுக்களாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான் செல்லர் சர்வீஸ் மற்றும் ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், பொன்னேரி அருகே துரை நல்லூர் கிராமத்தில் உள்ள அமேசான் செல்லர் சர்வீஸ் கிடங்கில் பிஐஎஸ் சென்னை கிளை இணை இயக்குநர்கள் கவுத்தம் பி.ஜே. தினேஷ் ராஜகோபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.
இச்சோதனையில் தரச் சான்றளிக்கப்படாத, பல தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறிய காப்பிடப்பட்ட குடுவைகள் மற்றும் உணவு கொள்கலன்கள், உலோக குடிநீர் பாட்டில்கள், சீலிங் ஃபேன்கள், பொம்மைகள் இருந்தது தெரிய வந்தது. ஆகவே, பிஐஎஸ் தர முத்திரை இல்லாத, ரூ.36 லட்சம் மதிப்புள்ள, காப்பிடப்பட்ட குடுவைகள் உள்ளிட்ட 3,376 பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், செங்குன்றம் அருகே கொடுவள்ளியில் உள்ள ஃபிளிப்கார்ட் கிடங்கில் பிஐஎஸ் இயக்குநர் ஸ்ரீஜித் மோகன் மற்றும் ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் குழந்தைகளுக்கான டயப்பர் 286 பாக்கெட்டுகள், 26 எஃகு வாட்டர் பாட்டில்கள், 10 காப்பிடப்பட்ட ஸ்டீல் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் பிஐஎஸ் தரநிலை முத்திரை (ஐஎஸ்ஐ) இல்லாமல் இருந்தன. ஆகவே இந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தப் பொருட்களை பிஐஎஸ் தரநிலை முத்திரை இல்லாமல் சேமித்து, விற்பனை செய்து, விற்பனைக்காக காட்சிப்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்கள் மீது இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016-ன் கீழ் பி.ஐ.எஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத் தலைவர் பவானி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் குற்றத்துக்கு முதல் மீறலுக்கு பிஐஎஸ் சட்டம் 2016 பிரிவு 29-ன் படி, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2 லட்சத்துக்கும் குறையாத அபராதம் விதிக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பொருட்கள், தயாரிக்கப்பட்ட அல்லது விற்கப்படும் பொருட்களின் மதிப்பில் பத்து மடங்கு வரை நீட்டிக்கப்படலாம்.
எனவே, பொது மக்கள், எவரேனும் இது போன்ற தகவல் தெரிந்தால், பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம், சிஐடி வளாகம், 4-வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம். BIS Care செயலியைப் பயன்படுத்தியோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்.
அத்தகைய தகவல்களின் ஆதாரம் ரகசியமாக வைக்கப்படும். பிஐஎஸ் இணையதளம் www.bis.gov.in மற்றும் e-BIS (manakonline.in) ஆகியவை பிஐஎஸ் பற்றிய பொதுவான தகவல்கள் உங்களுக்கு உதவும் என, பிஐஎஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment