Published : 23 Oct 2024 05:38 AM
Last Updated : 23 Oct 2024 05:38 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் ரூ.100 கோடிக்கு விற்பனை இலக்கு: கைத்தறி துறை அமைச்சர் காந்தி தகவல்

கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி தள்ளுபடி விற்பனையை அமைச்சர் ஆர்.காந்தி, சென்னை எழும்பூர் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் நேற்று தொடங்கிவைத்தார். உடன், கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர்.படம்: ம.பிரபு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பிலான கைத்தறித் துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.

தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாகத் திகழ்கிறது. நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 11 மண்டலங்களில் உள்ள 150 விற்பனை நிலையங்கள் மூலம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஜவுளி விற்பனை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனையை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று தொடங்கிவைத்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட கைத்தறி ரகங்களை அறிமுகம் செய்து வைத்தார். மேலும், வாடிக்கையாளர்களுக்கான கோ-ஆப்டெக்ஸ் சிறப்புரிமை அட்டையை அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தீபாவளியை முன்னிட்டு, தேசியவடிவமைப்பு நிறுவனம் மற்றும் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்ப நிறுவனங்களில் பயின்ற வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட, இளம் தலைமுறை மகளிருக்கான குர்த்தீஸ், கிராப் டாப், சார்ட்ஸ், ஜாக்கெட், ஸ்கர்ட்ஸ்உள்ளிட்ட ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

700 புதிய வடிவமைப்பு: மேலும், 700 புதிய வடிவமைப்பில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் மற்றும் கோயம்புத்தூர் பட்டுச் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெய்யப்பட்ட பருத்தி சேலைகள், கைலிகள்,மெத்தை விரிப்புகள், போர்வைகள், ஆடவருக்கான பல்வேறு வகையான ஆயத்த சட்டைகள், வேட்டிகள், துண்டுகள், சுடிதார் ரகங்கள், வீட்டு உபயோக ரகங்கள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஆகியவை புதிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மூங்கில் இழையால் உற்பத்தி செய்யப்பட்ட துண்டு ரகம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனைநிலையங்களில் ஜவுளி வாங்கும்அனைத்து வாடிக்கையாளர்களையும் "கோ-ஆப்டெக்ஸ்" குடும்பத்தின் ஒரு மதிப்பு மிக்க உறுப்பினராகக் கருதி, சிறப்புரிமை அட்டை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் ரூ.100 மதிப்பிலான துணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். ஒரு புள்ளியின் மதிப்பு ரூ. 1. ஒவ்வொரு முறைவாடிக்கையாளர் ஜவுளி வாங்கும்போதும் சேரும் புள்ளிகளை, அடுத்தமுறை ஜவுளி வாங்கும்போது அதற்கு இணையான தொகையை ஈடுசெய்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.76.25 கோடி மதிப்பில் ஆடைகள் விற்ற நிலையில், நடப்பாண்டு ரூ.100 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் வணிகம் மூலம் இதுவரை ரூ.1.10 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையைவிட ரூ.0.75 கோடி அதிகமாகும். கோ-ஆப்டெக்ஸ் துணிகளின்தரத்துக்கு, தனியார் நிறுவனங்களால் போட்டிபோட முடியாது. பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி வேட்டி, புடவைகளை குடும்பஅட்டைதார்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், கைத்தறி துறைச் செயலர் வே.அமுதவள்ளி, இயக்குநர் அ.சண்முகசுந்தரம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

யூனிட்டி மால்: சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள கோ -ஆப்டெக்ஸ் அலுவலகத்தையொட்டி ரூ.227 கோடியில், 4.5 லட்சம் சதுர அடியில்,8 மாடிகள் கொண்ட யூனிட்டி மால்கட்டப்பட உள்ளது. இங்கு தரை தளத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம், 1, 2-வது தளத்தில் மாநில, மாவட்ட விற்பனையகம், 3-வது தளத்தில் சர்வதேச வடிவமைப்பு நிறுவனம் ஆகியவைஇடம்பெற உள்ளன. இதர தளங்களில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அலுவலகங்கள் இடம்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x