Published : 22 Oct 2024 08:12 PM
Last Updated : 22 Oct 2024 08:12 PM

“வருங்காலங்களில் ட்ரோன் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெறும்” - சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

அமராவதி: “இனி வருங்காலங்களில் ட்ரோன் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெறும்” என இன்று அமராவதியில் ட்ரோன் மாநாட்டை தொடங்கி வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

அமராவதியில் இன்று ட்ரோன் மாநாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியது: “1995-ல் நான் முதல்வராக இருந்தபோது, ஹைதராபாத்தில் ஐடி துறை வளர்ச்சி பெற முயற்சிகளை மேற்கொண்டேன். அந்த நாட்களில் அங்கு ஹை-டெக் சிட்டியை உருவாக்கினேன். அமெரிக்கா சென்று 15 நாட்கள் தங்கி பல பிரதிநிதிகளை சந்தித்து ஹைதராபாத் வளர்ச்சிக்கு வித்திட்டேன். மக்கள் வசிக்க உலகிலேயே தற்போது மிக சிறந்த நகரமாக ஹைதராபாத் நகரம் உருவாகி உள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வெளிநாடுகளில் ஐடி துறையில் பணியாற்றுவோரில் 30 சதவீதம் தெலுங்கர்கள் என்பதிலும் பெருமை கொள்கிறேன். இப்போது சொத்து, பணத்தை விட உண்மையான சொத்து டேட்டா. வருங்காலங்களில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அவ்வளவு ஏன் ஒரு நாட்டுக்கே டேட்டா மிக முக்கியம். டேட்டாக்களுடன் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்தால் பல அற்புதங்கள் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சமீபத்தில் விஜயவாடாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ட்ரோன்கள் மூலம் பலருக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது.

எங்கெங்கு வெள்ளம் உள்ளது, நீர் வடிந்தது,வெள்ளத்தில் சிக்கிய மக்கள், கால்நடைகள், வாகனங்கள் குறித்தும் ட்ரோன்கள் மூலம் அறிந்து உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டோம். விவசாயம், அடிப்படை வசதிகளில் கூட ட்ரோன் உபயோகித்தோம். அப்பணிகள் வியக்கும் வண்ணம் உள்ளன. நகரில் போக்குவரத்து சரிசெய்யவும் ட்ரோன்களை உபயோகிக்கலாம்.

இனி வருங்காலங்களில் மருத்துவ சேவைகளிலும் ட்ரோனை உபயோகிக்கலாம். வீட்டை விட்டு வெளியே வர இயலாத நோயாளிகளுக்கும் ட்ரோன் மூலம் சிகிச்சை அளிக்கலாம். சில நாடுகள் போர்களில் ட்ரோன் உபயோகிக்கின்றனர். ஆனால் நாம், நாடு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்காக உபயோகிப்போம். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க உபயோகிப்போம். ஆந்திர போலீஸ் துறையில் விரைவில் ட்ரோன் உபயோகப்படுத்துவோம். ரவுடிகளின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் அறிந்து, ரவுடிகளை கட்டுப்படுத்துவோம்” என சந்திரபாபு நாயுடு பேசினார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் 5500 ட்ரோன்கள் மூலம் சாகச பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல நிறுவனங்கள் தயாரித்த விதவிதமான ட்ரோன்கள் பங்கேற்றன. லேசர் ஷோவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த ஆந்திர அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்கள் அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் பங்கேற்று ட்ரோன் நிகழ்ச்சியை ரசித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x