Published : 22 Oct 2024 02:43 PM
Last Updated : 22 Oct 2024 02:43 PM

தீபாவளிக்காக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு விற்பனை இலக்கு: அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

புதியதாக வடிவமைக்கப்பட்ட கைத்தறி ரகங்களை  பார்வையிட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி. உடன் அதிகாரிகள்.

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார்.

அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்படுகிறது. நிகழாண்டில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 11 மண்டலங்களில் உள்ள 150 விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் புதியதாக வடிவமைக்கப்பட்ட கைத்தறி ரகங்களை வாடிக்கையாளர்களுக்கு இன்று அறிமுகம் செய்து வைத்தார். மேலும், வாடிக்கையாளர்களுக்கான கோ-ஆப்டெக்ஸ் சிறப்புரிமை அட்டையையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.காந்நி கூறியதாவது: "தீபாவளி விற்பனைக்காக, தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்களில் பயின்ற வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட இளம் தலைமுறை மகளிருக்கான ஆயத்த ஆடைகளான குர்த்தீஸ், கிராப் டாப், ஷார்ட்ஸ், ஜாக்கெட், ஸ்கர்ட்ஸ் உள்ளிட்ட ரகங்கள் புதிய முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 700 புதிய வடிவமைப்பில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் மற்றும் கோயம்புத்தூர் பட்டுச் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெய்யப்பட்ட பருத்தி சேலைகள், கைலிகள், மெத்தை விரிப்புகள், போர்வைகள், ஆடவருக்கான பல்வேறு வகையான ஆயத்த சட்டைகள், வேட்டிகள், துண்டுகள், சுடிதார் ரகங்கள், வீட்டு உபயோக ரகங்கள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஆகியவை புதிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்த தீபாவளிக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இது தவிர, மூங்கில் இழையால் உற்பத்தி செய்யப்பட்ட துண்டு ரகம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் துணிகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் ‘கோ-ஆப்டெக்ஸ்’ குடும்பத்தின் ஒரு மதிப்பு மிக்க உறுப்பினராகக் கருதி, சிறப்புரிமை அட்டை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் ரூ.100 நிகர மதிப்பிலான துணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

ஒரு புள்ளி என்பதின் மதிப்பு ரூ.1 ஆகும். இதன் மூலம் ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்கள் துணிகள் வாங்கும் போது, சேரும் புள்ளிகளை அடுத்தமுறை துணிகள் வாங்கும் போது அந்த புள்ளிகளுக்கான தொகையை ஈடு செய்து கொள்ளலாம். தீபாவளி பண்டிகை விற்பனையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு ரூ.76.25 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.100 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மின் வணிக விற்பனையின் மூலம் இதுவரை ரூ.1.10 கோடி விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.0.75 கோடி அதிகமாகும். தனியார் துணி நிறுவனங்கள், கோ-ஆப்டெக்ஸ் துணியின் தரத்துக்கு போட்டி போட முடியாது. பொங்கல் பண்டிகைக்கு 1 கோடியே 77 லட்சம் வேட்டி, சேலைகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளோம்" என்று அமைச்சர் காந்தி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் அமுதவள்ளி, இயக்குநர் சண்முகசுந்தரம், மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x