Published : 19 Oct 2024 10:01 AM
Last Updated : 19 Oct 2024 10:01 AM

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.58,000-ஐ கடந்தது

படம் உதவி: மெட்டா ஏஐ

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.19) ஒரு பவுன் ரூ.58,000-ஐ கடந்து விற்பனையாகிறது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.58,240-க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு, பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. பின்னர், மீண்டும் தங்கம் விலை குறைய தொடங்கியது. ஆனால், இந்த விலை குறைவு நீடிக்கவில்லை.

அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், கடந்த 16-ம் தேதி (செப்.16) ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அக்.16 அன்று ஆபரணத் தங்கம் விலை மற்றொரு புதிய உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.57,120 என்ற நிலையில் விற்பனையானது.

இந்நிலையில் இன்று அக்.19 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம். ரூ.7.280-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு பவுன் ரூ.58,240 ஆக விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. அதேபோல் உள்நாட்டிலும் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் ரூ.7,500 வரையும், ஒரு பவுன் ரூ.60 ஆயிரம் வரையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x