Published : 17 Oct 2024 04:14 AM
Last Updated : 17 Oct 2024 04:14 AM

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. தீபாவளி நெருங்கி வருகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசின் 1.15 கோடிக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஒவ்வொரு ஆண்டும் இருமுறை உயர்த்தி வருகிறது. இவ்வாண்டு மார்ச் மாதம் மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்ந்தது. இது நடப்பாண்டு ஜனவரி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இவ்வாண்டில் இரண்டாவது முறையாக மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இம்முறை 3 சதவீதம் உயர்த்தப்படுவதால், அகவிலைப்படி 53 சதவீதமாக உயர்கிறது. இது ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் அமைச்சகம் ஒவ்வொரு மாதமும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை வெளியிட்டு வருகிறது. இந்தக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு அகவிலைப்படியை நிர்ணயிக்கிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பான வரைவை உருவாக்கி, அதை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்வது வழக்கம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x