Published : 04 Oct 2024 04:03 AM
Last Updated : 04 Oct 2024 04:03 AM

இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு

மும்பை: ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சி அடைந்தன. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,769 புள்ளிகள் சரிந்து 82,497-ல் நிலைபெற்றது. இதுபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 547 புள்ளிகள் சரிந்து 25,250-ல் நிலைபெற்றது. அனைத்து துறைகளின் குறியீட்டு எண்களும் சரிவை சந்தித்தன. ஒரே நாளில் 2 சதவீதத்துக்கு மேல் சரிவு ஏற்பட்டதால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

நிப்டி 50 பட்டியலில் உள்ள 48 பங்குகள் சரிந்தன. இதில் பிபிசிஎல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எல் அன்ட் டி, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 4 சதவீதத்துக்கு மேல் சரிந்தன. அதேநேரம், ஜெஎஸ்டபிள்யு (1.33%), ஓஎன்ஜிசி (0.36%) ஆகிய 2 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் 2,914 பங்குகள் வர்த்தகமாயின. இதில் 638 பங்குகள் மட்டுமே விலை உயர்ந்தன. 2,201 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 75 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை.

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதுபோல இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியதால் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தனர். இதுதவிர வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் சீன சந்தையில் முதலீடு செய்ய அதிக அளவில் பங்குகளை விற்றனர். இதுபோன்ற காரணங்களால் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x