Published : 27 Sep 2024 06:01 AM
Last Updated : 27 Sep 2024 06:01 AM

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல் விலை ரூ.3 வரை குறைய வாய்ப்பு

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதையடுத்து பெட்ரோல், டீசல் விலை 2 முதல் 3 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக இக்ரா தரக் குறியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இக்ரா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடைசியாக பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்ட போது கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 83 முதல் 84 டாலராக இருந்தது. இந்த நிலையில், நடப்பு செப்டம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை சராசரியாக பேரலுக்கு 74 டாலராக குறைந்துள்ளது.

இதனால், இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் விநியோக நிறுவனங்களின் மோட்டார் வாகன எரிபொருள் சில்லறை விற்பனையின் லாப வரம்பு வெகுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை மாற்றமின்றி நிலையாக இருக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளது என இக்ரா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கிரிஷ்குமார் கதம் தெரிவித்துள்ளார்.

ரூ.15 லாபம்: இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “2024 மார்ச் 15-ம் தேதி பெட்ரேல், டீசல் விலைலிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அதன்பிறகு, எரிபொருள்களின் சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர்பெட்ரோல் சில்லறை விற்பனையின் மூலம் ரூ.15, டீசல் சில்லறை விற்பனையின் மூலம் ரூ.12 நிகர லாபமாக கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. லாப வரம்பு அதிகரித்துள்ள நிலையில், அதில் ஒரு பகுதியை மோட்டார் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் பெட்ரோல், டீசல் விலைரூ.2 முதல் 3 வரை குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது.கடந்த மார்ச் மாத நிலவரப்படி உள்நாட்டு சுத்திகரிப்பு திறன் 256.8 மில்லியன் டன்னாக உள்ளது. நுகர்வு மற்றும் ஏற்றுமதி அதிகரித்து வருவதன் காரணமாக அடுத்த 3-4 ஆண்டுகளில் இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 306 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x