Published : 14 Sep 2024 07:07 AM
Last Updated : 14 Sep 2024 07:07 AM

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 அதிகரிப்பு: நகை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.54,600-க்கு விற்பனையாகிறது. பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் வரும் நேரத்தில் தங்கம் விலை உயர்ந்திருப்பது நகைவாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலைநேற்று அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.6,825-க்கும், பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.54,600-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.57,400-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை: மேலும் ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.95-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.95,000 ஆக உள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில், திடீரென தங்கத்தின் விலைஒரே நாளில் அதிரடியாக உயர்ந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, வீட்டில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் பண்டிகைக்கு நகை வாங்கதிட்டமிட்டிருந்தவர்கள் தங்கம் விலை உயர்வை கண்டு கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, ‘சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை ரூ.2,480-ல் இருந்து ரூ.2,570 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அத்துடன், உள்நாட்டிலும் வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதாலும், முகூர்த்தநாட்கள் என்பதாலும் தங்கம் விலைஅதிகரித்து வருகிறது. வரும்நாட்களிலும் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x