Last Updated : 29 Aug, 2024 04:54 AM

 

Published : 29 Aug 2024 04:54 AM
Last Updated : 29 Aug 2024 04:54 AM

இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவு புதிய உச்சம் தொடும்: சர்வதேச பருப்பு கூட்டமைப்பின் தலைவர் விஜய் ஐயங்கார் கருத்து

இந்தியா - சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பை முன்னிட்டு, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சிங்கப்பூரைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்து உரையாடினார். இதில் சர்வதேச பருப்பு கூட்டமைப்பின் தலைவரும் சிங்கப்பூர் தொழிலதிபருமான விஜய் ஐயங்காரும் கலந்துகொண்டார்.

புதுடெல்லி: இந்தியா, சிங்கப்பூர் அமைச்சர்கள் இடையிலான 2-வது வட்டமேஜை கூட்டம் சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இரு நாடுகளிடையிலான முதலீடு, வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

முதலாவது கூட்டம் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிலையில், இரண் டாவது கூட்டம் தற்போது சிங்கப்பூரில் நடைபெற்றது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். சிங்கப்பூர் தரப்பிலான அமைச்சர்கள் குழுவுக்கு, அந்நாட்டு துணை பிரதமர் கான் கிம் யோங் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தால் இந்தியா - சிங்கப்பூர் இடையிலான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என சர்வதேச பருப்பு கூட்டமைப்பின் தலைவரும் சிங்கப்பூர் தொழிலதிபருமான விஜய் ஐயங்கார் தெரிவித்துள்ளார். இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு விஜய் ஐயங்கார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சிங்கப்பூர்மிக அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவு இருநாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்திய நிறுவனங்களில் சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடு செய்வதும், இதேபோல சிங்கப்பூர் நிறுவனங்களுடன் தொழில்நுட்ப உறவைஇந்திய நிறுவனங்கள் மேற்கொள்வதும் வலுவடைந்துள்ளது. அமைச்சர்களின் சந்திப்பு, வரும் காலங்களில் இருதரப்பு உறவு மேலும் வலுப்படும் என்பதைவெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இவ்வாறு விஜய் ஐயங்கார் தெரிவித்தார்.

நிலையான வளர்ச்சி, டிஜிட்டல் மயமாக்கல், திறன்மேம்பாடு, சுகாதாரம், மேம்பட்ட உற்பத்தித் திறன், செமிகண்டக்டர் உற்பத்தி, இரு நாடுகளிடையிலான தொடர்பு வசதி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தியாவிலிருந்து எரிசக்தியை நேரடியாக சிங்கப்பூருக்கு விற்பனை செய்வது குறித்தும், ஹைட்ரஜன் மற்றும் அமோனியா மூலமான எரிசக்திபரிவர்த்தனை குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. சிங்கப்பூர் கல்விமுறை மீது இந்தியாவுக்கு மிகுந்த அபிப்ராயம் உள்ளது. சிங்கப்பூர் கல்வி முறை மற்றும் சான்றளிப்பு, திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.

மருத்துவத் துறை: இதேபோல மருத்துவத்துறையில் திறன்மிகுந்த மருத்துவ பணியாளர்களைப் பகிர்ந்து கொள்வது செவிலியர்களை அதிகம் பணியமர்த்துவது குறித்தும்இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. இரு நாடுகளிடையிலான இணைப்பை அதிகரிப்பதற்காக விமான சேவையை அதிகரிப்பது குறித்தும் பேசப்பட்டது. விமானங்களை நிர்வகிக்கவும், பழுது நீக்கவும் தேவையான வசதி மையங்களை ஏற்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவயன் பாலகிருஷ்ணன் கூறுகையில், “உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாகவும் இந்தியா திகழ்வதால், இந்தியாவுடன் வர்த்தக மற்றும் கலாசார உறவை மேம்படுத்திக் கொள்வதில் சிங்கப்பூர் மிகுந்த ஆர்வமாக உள்ளது.

ஆசியான் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. ஆசியானின் ஒர் அங்கமாக சிங்கப்பூரும் திகழ்வதால் இரு நாடுகளிடையிலான கூட்டு மிகவும் அவசிய மாகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியா-சிங்கப்பூர் இடையிலான வர்த்தகம் பலமடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் சமீபகாலமாக இருதரப்பு வர்த்தகம் பெருகியுள்ளது.

இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீடு செய்யும் வெளிநாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நேரடி அந்நிய முதலீடுகளில் கால் பகுதி அளவுக்கு சிங்கப்பூரின் பங்கு இருக்க வேண்டும் என்று கருதுகிறோம்” எனத் தெரிவித்தார்.

தொழிலதிபர்களுடன் தேநீர் விருந்து: கூட்டத்துக்கு முன்தினம் டெமாசெக், டிபிஎஸ் வங்கி, ஓமெர்ஸ், கெப்பல் இன்பிராஸ்டிரக்சர், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங் களைச் சேர்ந்த தலைவர்களுடன் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உரையாடினார்.

சிறிய அளவிலான அமைச்சர்கள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவரங்கள் பேசப்பட்டாலும், இது தொடர்பான முக்கிய முடிவுகள், ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை விரைவில் சிங்கப்பூர் வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x