Published : 31 Jul 2024 04:52 PM
Last Updated : 31 Jul 2024 04:52 PM

கொடைக்கானல் விதை பூண்டு ரூ.300-க்கு விற்பனை: விலை குறைவால் விவசாயிகள் கவலை

கொடைக்கானலில் விற்பனைக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ள மேட்டுப்பாளையம் ரக விதைப் பூண்டு.

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் விதைப் பூண்டு அறுவடை தொடங்கியது. மேலும், விலை குறைந்து விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் பூண்டி, மன்னவனூர், கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர், கிளாவரை உள்ளிட்ட மேல்மலைக் கிராமங்களில் சிங்கப்பூர் மற்றும் மேட்டுப் பாளையம் ரக மலைப் பூண்டு சாகுபடி நடைபெறுகிறது. இதில், சிங்கப்பூர் ரக பூண்டுக்கு மருத்துவ குணம் இருப்பதால், புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த பூண்டு சாம்பல் நிறத்தில் இருக்கும். காரத்தன்மையும் அதிகம். 6 முதல் 10 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதே போல், மேட்டுப்பாளையம் ரகத்தை விதைப் பூண்டுக்காக பயிரிடுகின்றனர். இதனை, வெளிமாநில விவசாயிகள், வியாபாரிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.

தற்போது, கடந்த மார்ச் மாதம் விதைப் பூண்டுக்காக நடவு செய்யப்பட்ட மேட்டுப்பாளையம் ரக பூண்டு அறுவடை தொடங்கியுள்ளது. அறுவடை பணியில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இம்மலைப்பகுதியில் விளையும் பூண்டை, தேனி மாவட்டம் வடுகபட்டி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இந்தாண்டு மேட்டுப்பாளையம் ரக பூண்டு நல்ல விளைச்சல் உள்ளது.

அதனால் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ விதைப் பூண்டு ரூ.600 வரை விற்றது. தற்போது ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து பூண்டு விவசாயிகள் கூறும்போது, கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் விதைப் பூண்டுக்கு வெளி யூர்களில் மவுசு அதிகம். இருப்பினும், இந்தாண்டு எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்துள்ளதால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்துள்ளது. அதனால் விலை சரி வடைந்துள்ளது. இன்னும் 2 மாதத்துக்கு விதைப் பூண்டு சீசன் என்பதால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை விற்றால் மட்டுமே விலை கட்டுப்படியாகும் என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x