Last Updated : 29 Jul, 2024 02:33 PM

 

Published : 29 Jul 2024 02:33 PM
Last Updated : 29 Jul 2024 02:33 PM

கோவை - சிங்கப்பூர் இடையே இண்டிகோ விமான சேவை: அக்டோபரில் தொடங்க அனுமதி

கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் அக்டோபர் மாதம் முதல் விமான சேவை தொடங்க அனுமதி கிடைத்துள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் கோவை - அபுதாபி இடையே புதிய விமான சேவை இண்டிகோ நிறுவனம் சார்பில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவையில் இருந்து இண்டிகோ நிறுவனம் சார்பில் சிங்கப்பூருக்கு விமான சேவை தொடங்க அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “கோவை- சிங்கப்பூர் இடையே தற்போது ‘ஸ்கூட்’ நிறுவனம் சார்பில் விமான சேவை வழங்கப்படுகிறது. வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும் இந்த சேவையில், சிங்கப்பூரில் இருந்து இரவு 10 மணிக்கு கோவைக்கு வந்து மீண்டும் 10.45 மணிக்கு சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட்டு செல்கிறது. அக்டோபர் முதல் இண்டிகோ நிறுவனம் சார்பில் கோவை - சிங்கப்பூர் இடையே விமானம் இயக்க அனுமதி கிடைத்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் வெளியாகும்” என்றனர்.

கோவையில் தற்போது இரண்டு வெளிநாடுகளுக்கு சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிதாக அபுதாபிக்கும், கூடுதல் விமான சேவை சிங்கப்பூருக்கும் தொடங்கப்பட உள்ளதால் வெளிநாடுக்கு இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x