Published : 26 Jul 2024 06:14 AM
Last Updated : 26 Jul 2024 06:14 AM

பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைப்பு எதிரொலி: தங்கம் விலை 3 நாளில் ரூ.3,040 குறைந்தது

சென்னை: இறக்குமதி வரி குறைப்பால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் ரூ.3,040 குறைந்துள்ளது. ஒரு பவுன் நேற்று ரூ.51,440-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்டோபர் 4-ம் தேதி பவுன் ரூ.42,280-க்கு விற்பனையானது.

பின்னர் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. டிசம்பர் 4-ம் தேதி ரூ.47,800, மார்ச் 28-ம் தேதி ரூ.50,000, ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 என பவுன் விலை புதிய உச்சங்களை அடைந்தது. பின்னர், சற்று குறைந்தது.

கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்றைய தினமே விலை குறைந்தது. காலையில் பவுன் ரூ.54,480 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் ரூ.52,400 ஆக குறைந்தது.

நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.480 குறைந்த நிலையில், நேற்றும் ரூ.480 குறைந்தது. நேற்று ஒரு கிராம் ரூ.6,430-க்கும், ஒரு பவுன் ரூ.51,440-க்கும் விற்பனையானது. இவ்வாறு கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.380, பவுனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது.

இதேபோல, வெள்ளி விலையும் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று முன்தினம் ரூ.92-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.89 ஆக குறைந்தது. நேற்று கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.89,000-க்கு விற்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது:

தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தபோதே, மீண்டும் சரிவை நோக்கிச் செல்லும் என்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறே விலை குறைந்து வருகிறது. எனினும், தங்கம் விலை தொடர்ந்து சரிவதற்கு, இறக்குமதி வரி குறைக்கப்பட்டதுதான் முக்கிய காரணம்.

ஓரிரு வாரங்களுக்கு விலையில் சற்று ஏற்ற இறக்கம் இருக்கக்கூடும். சர்வதேச அளவில் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டால் தங்கம் விலை மேலும் குறையும். பவுன் விலை ரூ.50 ஆயிரம் வரை இறங்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், ஆடி பதினெட்டுக்கு பிறகு விலை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x