Published : 24 Jul 2024 04:07 AM
Last Updated : 24 Jul 2024 04:07 AM

500 முன்னணி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: நாட்டின் முன்னணி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 1 கோடி பேருக்குவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பு, இளைஞர் களின் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்காக, பிரதமரின் ஒருங்கிணைந்ததொகுப்பின் கீழ் 5 புதுமையான திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இந்த 5 திட்டங்கள் வருமாறு:1. முதல் முறை வேலைக்கு ஆதரவு: ஒரு நிறுவனத்தில் முதல்முறையாக வேலைக்கு சேருபவர்களை ஊக்குவிப்பதற்காக இந்ததிட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, வருங்கால வைப்பு நிதியில்(இபிஎப்) புதிதாக பதிவு செய்தவர்களுக்கு ஒரு மாத ஊதியம்(ரூ.15 ஆயிரத்துக்கு மிகாமல்) அவர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக3 தவணைகளாக செலுத்தப்படும். மாதந்திர ஊதியம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

2. உற்பத்தித் துறையில் புதிய வேலை வாய்ப்பு உருவாக்கம்: உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கவும் புதிய ஊழியர்களை வேலைக்கு சேர்ப்பதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். புதியஊழியர்களின் இபிஎப் பதிவின்அடிப்படையில், இரு தரப்பினரின் இபிஎப் பங்களிப்பு தொகையையும் 4 ஆண்டுக்கு அரசே செலுத்தும்.

வேலை வழங்கும் நிறுவனத்துக்கு ஆதரவு: நிறுவனங்கள் கூடுதலாக வேலைக்கு ஆட்களை சேர்ப்பதை ஊக்குவிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, 2 ஆண்டுகளுக்கு புதிய ஊழியர்களின் இபிஎப் பங்களிப்பு தொகையை (மாதம் ரூ.3 ஆயிரம்) அரசிடமிருந்து திரும்பப் பெற முடியும். இதனால் நிறுவனங்களின் நிதி சுமை குறையும்.

4. திறன் மேம்பாட்டு திட்டம்: நாட்டில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு உதவியுடன் புதியதிட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதன்மூலம் இளைஞர்கள் எளிதாக வேலைவாய்ப்பை பெறுவதற்கான திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். இந்த திட்டம் மாநில அரசுகள் மற்றும் தொழில் துறையினருடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

5. முன்னணி நிறுவனங்களில் வேலைவாப்பு பயிற்சி: நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் திட்டம்அறிமுகம் செய்யப்படும் இந்த திட்டம் 500 முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதன் மூலம் 5 ஆண்டுகளில்1 கோடி இளைஞர்கள் பயன்பெறுவார்கள். பயிற்சியின்போது இவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதுதவிர ஒரு முறை நிதியுதவியாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், இளைஞர்களின் பயிற்சி செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த செலவில்10 சதவீதத்தை தங்கள் கார்ப்பரேட் நிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியிலிருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x