Published : 24 Jul 2024 05:03 AM
Last Updated : 24 Jul 2024 05:03 AM

நாற்காலியை காப்பாற்றும் முயற்சி: மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டானது, நாற்காலியைக் காப்பாற்ற முயற்சிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.

2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நேற்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரணமான தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திரா, ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பிஹார் மாநிலங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பட்ஜெட்டை, மத்திய அரசின் நாற்காலியைக் காப்பாற்றுவதற்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டாகவே இது அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது. பிஹாருக்கு ரூ.26 ஆயிரம் கோடி, ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.

சாமானிய இந்தியர்களுக்கு எந்தவித பலனும் இல்லாத வகையில், ஏஏ-வுக்கு (தொழிலதிபர்கள் அம்பானி, அதானி) பலன் தரும் விதமாக பட்ஜெட் உள்ளது.

மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணிக் கட்சிகளை மகிழ்விக்கும் விதமாகவும், திருப்திப்படுத்தும் விதமாகவும் பட்ஜெட்டைத் தயாரித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மற்றும் முந்தைய மத்திய பட்ஜெட்டுகளில் இடம் பெற்றிருந்த அறிவிப்புகள் ஆகியவற்றையும் தற்போதைய மத்திய பட்ஜெட்டில் காப்பி அடித்து இடம் பெறச் செய்துள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x