Published : 03 Jul 2024 05:33 AM
Last Updated : 03 Jul 2024 05:33 AM

ரூ.180 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் மல்லையாவுக்கு பிடிவாரன்ட்

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக கர்நாடகாவை சேர்ந்தவிஜய் மல்லையா (68) இருந்தார். இவர் கடந்த 1978-ம் ஆண்டில் கிங்பிஷர் மதுபான நிறுவனத்தை தொடங்கினார். கடந்த 2005-ம் ஆண்டில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தை தொடங்கினார். இவை தவிர பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார்.

கடந்த 2011, 2012-ம் ஆண்டுகளில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதன்காரணமாக கடந்த 2012-ம் ஆண்டில் கிங் பிஷர் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்டநிறுவனங்களுக்காக இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவில் விஜய் மல்லையா கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2016-ம் ஆண்டில் அவர் பிரிட்டனுக்கு தப்பியோடிவிட்டார்.

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையும் சிபிஐயும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றன.இந்தியாவில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகள் முடக்கப்பட்டன. கடந்த 2019-ம் ஆண்டில் அவர், தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபரில் பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் பிரிட்டிஷ் போலீஸார், விஜய் மல்லையாவை கைது செய்தனர். இந்த வழக்கில் தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். அண்மையில் அவரது மகன் சித்தார்த்தா, ஜாஸ்மின் திருமணம் லண்டனில் நடைபெற்றது. இதில் விஜய் மல்லையா பங்கேற்றார்.

இந்த சூழலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அவர் ரூ.180 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கு மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி நாயக் நிம்பல்கர் முக்கிய உத்தரவினை பிறப்பித்தார். இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு ஏற்கெனவே பலமுறை பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிபதி நாயக் நிம்பல்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x