Last Updated : 01 Jul, 2024 07:49 PM

 

Published : 01 Jul 2024 07:49 PM
Last Updated : 01 Jul 2024 07:49 PM

தமிழகத்தில் 300 ச.மீ, 14 மீ உயரம் வரையிலான வணிக கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்று தேவையில்லை!

சென்னை: தமிழகத்தில் 300 சதுர மீட்டர் மற்றும் 14 மீட்டர் உயரத்துக்குள் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் தேவையில்லை என தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் அடிப்படையில் தற்போது கட்டிட அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும்,கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது. இந்த விதிகளை திருத்த வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

இதுதவிர, அதிக உயரமில்லாத அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதைஏற்று கடந்த மார்ச் மாதம், ஏற்கெனவே 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என்றிருந்ததை அதிக பட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என திருத்தம் செய்யப்பட்டது. எனவே, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற அவசியம் இல்லை.

அதேபோல், அதிக உயரமில்லாத கட்டிடங்களை பொறுத்தவரை, அக்கட்டிடத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது வணிக கட்டிடங்களுக்கும் இந்த சலுகையை அளித்துள்ளது. இதற்காக,தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 8 வீடுகள் அல்லது 750 சதுரமீட்டர் என்பதுடன், வணிக கட்டிடங்கள் 300 சதுர மீட்டர் வரை மற்றும் உயரத்தில் 14 மீட்டர் என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 300 சதுரமீட்டர் வரையும், உயரத்தில் 14 மீட்டருக்கு மிகாமலும் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கும் இனி பணி நிறைவு சான்றிதழ் பெறத் தேவையில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x