Published : 07 Jun 2024 08:01 PM
Last Updated : 07 Jun 2024 08:01 PM

சிவகாசியில் தொடரும் சிறு பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்: 10,000 பேர் வேலை இழப்பு

 சிவகாசி - சாத்தூர் சாலையில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை

Dசிவகாசி: சிவகாசி பகுதியில் 15 நாட்களைக் கடந்தும் சிறு பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்வதால் ரூ.30 கோடி வரை உற்பத்தி பாதிக்கப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று சிறிய மற்றும் பெரிய அளவில் 1,100-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. பட்டாசு தொழில் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு வர்த்தகமும், 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

கடந்த மாதம் 9-ம் தேதி சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு வசதிகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அமைத்த 5 குழுக்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் தனி வட்டாட்சியர், வருவாய் துறையினர், பெசோ அதிகாரிகள் தனித்தனியாக ஆய்வு நடத்தி 90-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உற்பத்தி உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

அதிகாரிகளின் ஆய்வை கண்டித்தும், சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி, தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சார்பில் மே 24-ம் தேதி முதல் சிறு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து 15 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வருகிறது.

மேலும் அதிகாரிகளின் ஆய்வு மற்றும் மழை காரணமாகவும் பல பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் ரூ.30 கோடி அளவுக்கு பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறிவிப்பு பலகை: இதனிடையே, சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள மீனம்பட்டி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் கடன் கொடுத்தவர்கள் மற்றும் குழுவில் கடன் கொடுத்தவர்கள், ஒரு மாதத்துக்கு கடன் வசூலிக்க வர வேண்டாம் என மீனம்பட்டியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x