Published : 30 May 2024 05:09 AM
Last Updated : 30 May 2024 05:09 AM
புதுடெல்லி: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.
கடந்த 1956-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான இது, ஆயுள் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இது நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக விளங்குகிறது.
கடந்த மார்ச் 31 நிலவரப்படி, எல்ஐசி-யின் சொத்து மதிப்பு ரூ.51 லட்சத்து 21 ஆயிரத்து 887 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.43 லட்சத்து 97 ஆயிரத்து 205 கோடியாக இருந்தது. எல்ஐசி சொத்து மதிப்பு ஓராண்டில் 16.48% அதிகரித்துள்ளது.
எல்ஐசி-யின் சொத்து மதிப்பு, பாகிஸ்தானின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பைப் (ரூ.28 லட்சம் கோடி) போல சுமார் 2 மடங்கு அதிகம் ஆகும். மேலும் பாகிஸ்தான் (ரூ.28 லட்சம் கோடி), நேபாளம் (ரூ.3.68 லட்சம் கோடி), இலங்கை (ரூ.6.23 லட்சம் கோடி) ஆகிய அண்டை நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபி மதிப்பைவிடவும் எல்ஐசியின் சொத்து மதிப்பு அதிகம் ஆகும்.
கடந்த 2023-24 நிதியாண்டில் எல்ஐசியின் லாபம் ரூ.40,676 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் ஆயுள் காப்பீடு தவணையாக ரூ.4,75,070 கோடியைஈட்டி உள்ளது. பாலிசிதாரர்களுக்கு ரூ.52,955 கோடியை ஊக்கத் தொகையாக வழங்கி உள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டு சந்தையில் எல்ஐசி 59% பங்குடன் முதலிடத்தில் நீடிக்கிறது. மருத்துவக் காப்பீட்டு துறையிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள எல்ஐசி, சொத்து மதிப்பு அடிப்படையில் (ரூ.6.46 லட்சம் கோடி) 7-வது பெரிய நிறுவனமாக உள்ளது. எல்ஐசி பங்கு விலை கடந்த 6 மாதங்களில் 50% உயர்ந்துள்ளது. எல்ஐசியில் மத்திய அரசுக்கு 96.5% பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...