Published : 16 May 2024 03:15 PM
Last Updated : 16 May 2024 03:15 PM

தங்கம் விலை: சென்னையில் ஒரேநாளில் ரூ.560 உயர்வு; சவரன் ரூ.54,360-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் இன்று (மே.16) ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு தங்கம் விலை கடுமையாக குறைந்தது. கடந்த அக்டோபர் 4-ம் தேதி சவரன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது.

இதன் பின்னர் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி ஒரு சவரன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.

அதன் பின்னர் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஏப்.19-ம் தேதி ரூ.55,120 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், இன்று (மே.16) 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.54,360 என்ற விலையில் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,795-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கம் சவரன் ரூ.58,120-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.92.50-ஆகவும், பார் வெள்ளி ரூ.1,500 அதிகரித்து ஒரு கிலோ ரூ.92,500 ஆகவும் உள்ளது.

இது தொடர்பாக சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: “அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, பெடரல் வட்டி விகிதம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்கிறது. குறிப்பாக, அட்சய திருதியை முடிந்த பிறகு தங்கம் விலை மீண்டும் உயரும் என கணித்திருந்தோம். அதேபோல் தேவை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. 3 முதல் 4 மாத காலத்துக்குள்ளாக சவரன் ரூ.60 ஆயிரம் என்னும் புதிய உச்சத்தை அடையும்” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x