Published : 06 May 2024 05:39 AM
Last Updated : 06 May 2024 05:39 AM

அட்சய திருதியை முன்பதிவு தொடக்கம்; இந்தாண்டு 25% வரை விற்பனை அதிகரிக்கும்: நகை விற்பனையாளர்கள் நம்பிக்கை

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு, நகைக் கடைகளில் தங்கம் விற்பனை முன்பதிவு மூலமாக தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகை விற்பனை 25 சதவீதம் அதிகரிக்கும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும், ஐதீகமும் மக்களிடம் உள்ளது.இந்த ஆண்டு அட்சய திருதியை வரும் 10-ம் தேதி காலை 6.33 மணிக்குத் தொடங்கி மறுநாள் சனிக்கிழமை 4.56 மணி வரை உள்ளது. எனவே, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன.

இதன்படி, பவுனுக்கு ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியும், சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கி உள்ளன. அத்துடன் புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஏராளமான புதிய நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளான்று 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானது.

இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, “இந்த ஆண்டு அட்சய திருதியை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடி சலுகைகளை நகைக் கடைகள் அறிவித்துள்ளன. அத்துடன், முன்பதிவும் தொடங்கப்பட்டு உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் தற்போது கடைகளுக்கு வந்து தங்களுக்குப் பிடித்த நகைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்துவிட்டு அட்சய திருதி தினத்தன்று சென்று வாங்கிக் கொள்ளலாம்.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.54 ஆயிரம் வரை அதிகரித்தது. இந்நிலையில் தற்போது தங்கம் விலை குறைந்து வருவதால், வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகை விற்பனை 25 சதவீதம் அதிகரிக்கக் கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon