Last Updated : 20 Mar, 2024 09:05 AM

2  

Published : 20 Mar 2024 09:05 AM
Last Updated : 20 Mar 2024 09:05 AM

ஹோலி, தேர்தலுக்காக சொந்த ஊர் செல்லும் வட மாநில தொழிலாளர்கள்: கோவையில் ஒரு ‘ஷிப்ட்’ மட்டுமே பணி

ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு குழுவாக கோவை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள். | படம்: ஜெ.மனோகரன்

கோவை: வட மாநில தொழிலாளர்கள் பலர் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளதால் எம்எஸ்எம்இ நிறுவனங்களில் ஒரு ஷிப்ட் மட்டுமே பணி நடப்பதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.

கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இந்தாண்டு வரும் 24-ம் தேதி ஹோலி பண்டிகை வருவதாலும், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாலும் பலர் குழுக்களாக கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். இதனால் தொழில் நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இது குறித்து ‘காட்மா’ அமைப்பின் தலைவர் சிவக்குமார், ‘காஸ்மாபேன்’ தலைவர் சிவ சண்முக குமார், ‘கொசிமா’ முன்னாள் தலைவர் சுருளி வேல் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உற்பத்திப்பிரிவின் கீழ் உள்ள எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் குறைந்துள்ளன. இதனால் வட மாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றும் அரசூரில் உள்ள பவுண்டரி தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் மாலை 5 மணிக்கு பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விடுகின்றன.

வழக்கமாக இப்பகுதிகளில் பகல், இரவு தொடர்ந்து 24 மணி நேரமும் உற்பத்தி நடப்பது வழக்கம். ஆனால் தற்போது ஒரு ஷிப்ட் மட்டுமே செயல் படுகிறது. பம்ப்செட் தேவைக்கான பணி ஆணைகள் நிலையாக உள்ளன. இருப்பினும் மற்ற துறைகளில் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் பணி ஆணைகள் குறைந்துள்ளன. இதனால் வட மாநில தொழிலாளர்கள் பலர் குழுக்களாக சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஹோலி பண்டிகைக்கு சென்றால் ஒரு மாத விடுமுறைக்கு பின் தான் கோவை திரும்புவார்கள்.

அரசூரில் உள்ள தொழிற்பேட்டையில் மாலை 5 மணியுடன் வார்ப்பட தொழில் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

பெரும்பாலும் ஒரு குழு சென்றால் மறு குழு பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களில் கோவை திரும்பும். ஆனால் இந்தாண்டு ஹோலி பண்டிகை மார்ச் 24-ம் தேதி முடிந்தவுடன் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள் கோவை திரும்ப மேலும் காலதாமதமாகும். தற்போதைய சூழலில் தொழில் முனைவோர் விரிவாக்க திட்ட பணிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதே போல் ‘ஜாப் ஒர்க்’ பணியை மட்டும் செய்து வரும் தொழில் நிறுவனங்கள் பொருட்கள் உற்பத்தியை தொடங்க முன்வர வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் பணி ஆணைகள் பெறுவதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களை மட்டும் நம்பி இருப்பதை தவிர்க்க வேண்டும். வட மாநில தொழிலாளர்கள் கோவை திரும்புவதில் காலதாமதம் ஏற்படுவதால் இந்தாண்டு உற்பத்தி தொழில் நிறுவனங்களில் எதிர்வரும் மாதங்கள் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x