Published : 03 Jan 2024 11:32 AM
Last Updated : 03 Jan 2024 11:32 AM

அதானி வழக்கு | சிறப்புக் குழு தேவையில்லை; ‘செபி’ அமைப்பே விசாரிக்கும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: "அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும்" என ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை என்றும், விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற எந்த அவசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதேபோல், 22 புகார்களில் 20 புகார்களின் விசாரணையை செபி முடிந்துவிட்டது. மீதமுள்ளள இரண்டு வழக்குகளின் விசாரணையை செபி 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், செபியின் ஒழுங்குமுறை சட்டத்துக்குள் ஒரு குறிப்பிட்ட அளவே உச்ச நீதிமன்றத்தால் தலையிட முடியும். அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் ஆராய முடியும். ஒழுங்குமுறையை திரும்பப்பெற செபி அமைப்புக்கு உத்தரவிட சரியான காரணங்கள் இல்லை. " என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி: கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது. பங்கு மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது, பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது, அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டது என்றெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டது. இதனால் பெரும் இழப்பை எதிர்கொண்டது அதானி குழுமம்.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச்சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த சூழலில் இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x