Published : 03 Jan 2024 04:04 AM
Last Updated : 03 Jan 2024 04:04 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை மற்றும் கட்டிக்கானப் பள்ளி பகுதியில் தலா ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள நவீன மீன் விற்பனை நிலையங்களைத் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன்வளத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், 100 சதவீத மானியத்தில் மீனவர் கூட்டுறவுச் சங்கத்துக்கு நவீன மீன் விற்பனை நிலையங்கள் கட்டி வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நீர்ப்பிடிப்புப் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் மற்றும் கடல் மீன்களை விற்பனை செய்யும் வகையில், ரூ.8 லட்சம் மதிப்பில் குளிர்பதன வசதியுடன் விற்பனை நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கிருஷ்ணகிரி சிறுவர் பூங்கா அருகே கட்டப்பட்ட விற்பனை நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கோவிந்த ராஜ் மற்றும் சிலர் கூறியதாவது: ஓசூர், பாரூர் பகுதிகளில் மீன்வளத்துறை சார்பில் நவீன மீன் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி அணை சிறுவர் பூங்கா அருகே நவீன மீன் விற்பனை நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் பல மாதங்களாக மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல் உள்ளது.
இதேபோல, கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குச் செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன மீன் விற்பனை நிலையமும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்ட இரு மீன் விற்பனை நிலையங்களையும் திறக்க மீன்வளத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக மீன்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, “கிருஷ்ணகிரி அணை அருகே சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அப்பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. இதனால், மீன் விற்பனை நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. மேலும், கட்டிகானப் பள்ளி மீன் விற்பனை நிலையம் விரைவில் திறக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment